திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்.. புகார் தெரிவிக்க வாட்ஸ் ஆஃப் எண்
மதுரை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் முறைகேடுகளை தெரிவிக்க வாட்ஸ் ஆஃப் எண்ணை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து, தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர் சீனிவேல் உயிரிழந்த காரணத்தால் அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, தேர்தல் ரத்தான இரண்டு தொகுதிகள் உள்பட மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 19-ம் தேதியன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் முறைகேடுகளை தெரிவிக்க வாட்ஸ் ஆஃப் எண்ணை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிவித்துள்ளார்.
தேர்தல் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களை இன்று சந்தித்த மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் கூறுகையில், இடைத்தேர்தல் நடைபெறுவதால், பொதுமக்கள் பணத்தை வெளியே எடுத்துச் செல்லும் போது அதற்கான ஆவணங்களையும் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்காளாகள் தங்கள் பகுதியில் நடைபெறும் தேர்தல் முறைகேடுகளை தெரிவிக்க கட்டணமில்லா அழைப்பு எண் 18004253340 வும் வாட்ஸ் ஆஃப்பில் புகார் தெரிவிக்க 8903003451 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். பதட்டமான வாக்குசாவடிகளாக 43 வாக்குச்சாவடிகள் கணக்கிடப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுதப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications