வதந்திகளை கண்டுபிடிக்க உதவினால் ரூ.30 லட்சம் பரிசு.. அதிரடி அழைப்பு விடுக்கும் வாட்ஸ் ஆப்!
சென்னை: வதந்திகளை கண்டுபிடிக்க உதவினால் ரூ.30 லட்சம் பரிசு கொடுக்கப்படும் என்றுவாட்ஸ் ஆப் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
வாட்ஸ் ஆப் வதந்தி பிரச்சனை தற்போது இந்தியாவில் மிகவும் பெரிதாகி உள்ளது. பசு கொலை தொடங்கி குழந்தை கடத்தல் வரை வாட்ஸ் ஆப் வதந்தியால் பல கொலைகள் நடக்கிறது.
இதற்கு முடிவு என்ன என்று தெரியாமல் அரசு குழம்பி தவிக்கிறது. ஆனால் இதற்கு முடிவு கட்ட தற்போது வாட்ஸ் ஆப் முடிவெடுத்துள்ளது.
வாட்ஸ் ஆப் வதந்தி
இந்த வருட தொடக்கத்தில்தான் அந்த வாட்ஸ் ஆப் மெசேஜ் வலம் வர தொடங்கியது. உங்கள் குழந்தைகளை ஒரு கும்பல் கடத்துகிறது, பாதுகாப்பாக இருங்கள் என்று பரவியது.மர்ம கும்பல் ஒன்று குழந்தைகளை கடத்தி விற்பதாக வெளியான இந்த வாட்ஸ் ஆப் வதந்தி காரணமாக கடந்த 5 மாதங்களில் மட்டும் 28 பேர் இந்தியா முழுக்க கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கேள்வி
இந்த நிலையில் இந்த பிரச்சனையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, வாட்ஸ் ஆப்பிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இதில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்றும் கேட்டது. இதன்படி, வாட்ஸ் ஆப் மூலம் தான் கொலை நடக்கிறது என்று சொல்ல முடியாது, ஆனால் வாட்ஸ் ஆப் மூலம் பொய்யான தகவல்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது.
திட்டம்
இந்த நிலையில் வாட்ஸ் ஆப் பொய்யான செய்திகளை, மெசேஜ்களை கண்டுபிடிக்க புதிய முறையை கடைபிடிக்க உள்ளது. இதை கொஞ்சம் காஸ்ட்லியான முறை என்று கூட சொல்லலாம். அதன்படி வாட்ஸ் ஆப் வதந்திகளை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுக்க ரெடி என்று கூறியுள்ளது. இதற்காக வாட்ஸ் ஆப்பில் புதிய வசதியை ஏற்படுத்தும் வகையில், ஆராய்ச்சி செய்யும் திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த பரிசு அளிக்கப்படும்.
எத்தனை
இதற்கான விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் 15ம் தேதியில் இருந்து சமர்ப்பிக்கலாம் என்று வாட்ஸ் ஆப் கூறியுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை இதற்காக உருவாக்க இந்த நபர்கள் உதவ வேண்டும். இதற்கு என்ன தகுதி வேண்டும் என்பதை வாட்ஸ் ஆப் சில நாட்களில் தெரிவிக்கும். இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் முடிவெடுத்துள்ளது.