தமிழகத்தில் நரபலி எடுக்கும் வாட்ஸ்அப் வதந்திகள்... பின்னணி என்ன.. தடுப்பது எப்படி?
Recommended Video
சென்னை: அதிகரிக்கும் வாட்ஸ்அப் வதந்திகளால் தமிழகத்தில் குழப்பமான, கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டு வரும் நிலையில், அதன் உச்சகட்டமாக வாட்ஸ்அப் வதந்திகள் இப்போது நரபலி எடுக்க ஆரம்பித்துள்ளன.
"பாலவாக்கத்தில் காலை 8 மணியளவில் நடந்த சம்பவம் 8:5:18 இந்தி மொழியில் பேசும் பையன் பெண் வேடத்தில்
குழந்தையை கடத்த முயன்ற போது பிடிபட்டார் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்" இப்படி தேதியை மட்டும் மாற்றியபடி தினமும் உங்கள் வாட்ஸ்அப்புக்கு மெசேஜ் வருகிறதா.
நீங்கள், உங்களை முதலில் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது இந்த மெசேஜ்களிடமிருந்துதான். இதுபோன்ற வதந்தி மெசேஜ்கள்தான் இன்று, தமிழகத்தில் ஹாட் ட்ரெண்ட்டாக மாறியுள்ளது பெரும் சோகம்.
அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள்
திருவண்ணாமலை அருகே குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்த மூதாட்டி ருக்மணி கிராம மக்களால் சூழப்பட்டு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வடு ஆறும் முன்பாக, சென்னை பழவேற்காடு பகுதியில் குழந்தைகளைக் கடத்த வந்ததாக மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க நபரை, அப்பகுதி பகுதி மக்கள், கடுமையாக தாக்கி, கொலை செய்து, கண்களை பிடுங்கி, மூக்கை உடைத்து கோரத்தாண்டவம் ஆடியுள்ளனர்.
வாட்ஸ்அப் வலைத்தளம்
இதற்கெல்லாம் மூல காரணம், வாட்ஸ்அப்பில் பரவும் வதந்திகள்தான். குற்றத்தை தூண்ட வதந்தி காரணமாக இருந்தது என்றால், குற்றத்தை நிகழ்த்திய பிறகு, அதை பெருமையாக வீடியோவாக உலவ விடவும் இதே வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் காரணமாக உள்ளன. மூதாட்டி மற்றும் மனநோயாளி கொலை சம்பவங்களில், அவர்களை அடித்து உதைக்கும் காட்சி வீடியோவாக பரவியது.
ஓடுவது வசதி
இதுபோன்ற சம்பவங்களுக்கு முதல் காரணம் யார்? சில பகுதிகளில் வட மாநில இளைஞர்கள் நடத்திய கொள்ளை, கடத்தல் போன்றவைதான். மொழி தெரியாத ஊருக்கு வந்துவிட்டு குற்றச்செயல்களை புரிந்துவிட்டு ஓடிவிடுவது அவர்களுக்கு வசதியாக இருந்தது. திருப்பூரில் இதுபோன்ற குற்றச்செயல்கள் சமீபகாலமாக அதிகம் நடந்ததை பார்த்திருக்கலாம். இதனால் அச்ச உணர்வு, பாதுகாப்பை தங்கள் கையில் எடுக்க வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர்.
சந்தேகப்பார்வை
இதனால்தான் வாட்ஸ்அப் வதந்திகளுக்கும் அவர்கள் செவிமடுத்து வன்முறையை கையில் எடுத்து தவறிழைக்கிறார்கள். அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள். காவல்துறையிடம் ஒப்படைத்தால் எளிதாக அவர்கள் வெளியே வந்துவிடுவார்கள் என்ற பொது ஜன மனநிலையும் அதற்கு ஒரு காரணமாக உள்ளது. வட மாநில இளைஞர்கள் நிகழ்த்திய குற்றச்செயல்கள் அனைவர் மீதும் சந்தேகப் பார்வையை படர விடுகிறது.
உரிமையாளர்களுக்கு தேவை பொறுப்பு
இதெற்கெல்லாம் ஒரே தீர்வு, வட மாநில இளைஞர்களை பணிக்கு அமர்த்தியுள்ளோர் கூடுதலாக பொறுப்பை எடுக்க வேண்டியதுதான். தங்கள் பணியாள் ஆதார் அடையாள அட்டை, அவரின் போட்டோ உள்ளிட்ட விவரங்களின் நகல்களை பராமரிக்க வேண்டும். அந்த நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். எளிதில் தப்பியோட வாய்ப்புள்ளவர்கள் என்பதால்தான் இந்த கெடுபிடிக்கு அவசியம் ஏற்படுகிறது. இதன் மூலம் மக்களின் பீதி குறையும். வாட்ஸ்அப் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இந்த பணிகளை கெடுபிடியோடு செய்ய வேண்டிய கடமை காவல்துறைக்கும் உள்ளது.