உண்மை வீட்டு வாசலை தாண்டறதுக்குள்ள.. வாட்ஸ் ஆப் வசந்திகள்.. ஒரு சுத்து சுத்திட்டு வந்துரும்ணே!
உண்மை வீட்டு வாசப்படி தாண்டறதுக்குள்ள, பொய் ஊரையே ஒரு சுத்து சுத்திட்டு வந்துடும்னு சொல்வாங்களே அது நூத்துக்கு நூறு உண்மை. அதுவும் குறிப்பா, தேர்தல்னு வந்துட்டா வதந்திகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். எல்லாமே மாறிப்போன இந்த ஹைடெக் யுகத்தில் தேர்தல் பிரச்சார முறைகளும் தலைகீழாக மாறிவிட்டதை நாம் பார்த்துகிட்டு தான் இருக்கிறோம்.
சுவர்களில் சின்னங்களை வரைஞ்சு, ''போடுங்கம்மா ஓட்டு.. நம்ம சின்னத்தை பார்த்து..'' என தெருக்களில் கோஷம்போட்டுகிட்டே போன காலமெல்லாம் மலையேறிடுச்சி. இன்றைக்கு தேர்தல் பிரச்சார நடைமுறைகள், லைகா புரடெக்ஷன் படங்களைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் ஹை-பட்ஜெட் களேபரங்களாக உருமாறியிருக்கின்றன.
இது போதாதென்று, கார்ப்பரேட் ஸ்டைலில் கட்சிகளுக்கு உதவ தேர்தல் வீயூக நிபுணர்களும் இப்போது புதிதாக களமிறங்கியிருக்காங்க.
''நாங்க சொல்றபடி செய்யுங்க; அடுத்த சி.எம் நீங்கதான்'' என்கிற தேர்தல் வியூக நிபுணர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கிப்போன தலைவர்கள் பலர் உண்டு. இதில் ஒரு சிலர் நிஜமாகவே முதலமைச்சர் ஆனதும் உண்டு. மற்றவர்கள் ''எங்கே அந்த தேர்தல் வியூக நிபுணர்?'' என கோபம் கொப்பளிக்கத் தேடிக்கொண்டிருப்பதாக செய்திகளும் உண்டு.
பிரஷாந்த் கிஷோருடன் ஒப்பந்தம்
வரப்போற தமிழக சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார். அதிமுக, கமல்ஹாசன், ரஜினி என எல்லா பக்கங்களிலும் துண்டுபோட்டு வைத்திருந்துவிட்டு கடைசியில் அறிவாலய காண்டிராக்டை உறுதி செய்திருக்கும் கிஷோரின் வியூகங்கள் திமுகவுக்கு பலம் சேர்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிரச்சாரத்திற்காகக் கட்சிகளிடமிருந்து கோடிக்கணக்கில் கறந்துவிடும் தேர்தல் வியூக நிபுணர்களின் முக்கிய துருப்புச் சீட்டே சமூக வலைத்தளங்கள்தான். அதிலும் இந்த வாட்ஸப் இருக்கிறதே.. அதை அவர்களின் செல்லப்பிள்ளை என்றுதான் சொல்ல வேண்டும்.
வதந்தி பரப்புவதில்
காரணம் வாய்க்கு வந்ததை, வதந்திகளைப் பரப்புவதில் வாட்ஸ் அப்புக்கு ஈடு இணை எதுவுமில்லை! ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரில் ஏதாவது தவறான செய்தியை பதிவிட்டால், அது தவறானது என்பதை யாராவது புள்ளிவிவரத்துடன் கமெண்ட்டில் வந்து பதிவிட்டு போஸ்ட் போட்டவரின் முகத்திரையை கிழித்துவிட வாய்ப்பிருக்கிறது. ஆனால் வாட்ஸ் அப்பில் அந்த பிரச்னையே இல்லை. நீங்கள் உங்கள் பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டுவிட்டு, அடுத்த குரூப்பில் அதே வேலையை செய்ய போய்விடலாம். அது ஒருபக்கம் தானாகவே சிறகு முளைத்து பறந்துகொண்டிருக்கும்.
டிவி பிளாஷ்
பல நேரங்களில் செய்தி சேனல்களின் பிளாஷ், பிக் நியூஸ்களுக்கும், வாட்ஸ் அப் வதந்திகளுக்கும் செம போட்டி ஏற்படுவதுண்டு. ஆனானப்பட்ட அமித்ஷாவே ஒருமுறை '' அது உண்மையோ, பொய்யோ கட்சிக்கு பலன் கிடைக்குமென்றால் கொஞ்சமும் யோசிக்காமல் வாட்ஸ் அப்பில் எதை வேண்டுமானாலும் பரப்புங்கள்'' என பாஜக தொண்டர்களுக்கு அறிவுறுத்தியதன் மூலம் வாட்ஸ் அப்பின் மத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.
அமித்ஷா சொன்ன மாதிரி இஷ்டத்திற்கு அள்ளிவிடலாம் என்பதால் அரசியல் கட்சிகள், தேர்தல் வியூக நிபுணர்கள் தவிர, சாதாரண மனிதர்களின் முதல் சாய்ஸாகவும் அரசியல் வாட்ஸ் அப் குழுக்கள் இருக்கின்றன.
யார் யார்
எங்கு, எப்போது நடந்தது, உடனிருந்தவர்கள் யார், யார்? என்கிற விபரங்களெல்லாம் தேவையில்லை. அருகிலிருந்து பார்த்தவர்கள் போல் பலரும் வாட்ஸப்பில் அள்ளிவிடும் அழகு இருக்கிறதே... அட... அட! ‘'காமராஜர் ஒருமுறை காரில் சென்றபோது என்பதில் ஆரம்பித்து, அப்துல்கலாம் வீணை மீட்டுவதை நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம்'' என்பது வரை ஆளாளுக்கு சொந்த சரக்குகளை அள்ளிவிடுவது வாட்ஸ் அப் உலகில் வழக்கமாக இருக்கிறது. கற்பனை அழகு தான். ஆனால் அது கவிதைக்கு அழகு, கதைக்கு அழகு. நிஜ வாழ்வில் கற்பனைக் கதைகள் உண்மையை போல உலா வர ஆரம்பிக்கும்போது பலரின் உயிருக்கே உலை வைக்கும் எமனாக மாறிவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.
பிள்ளை பிடிக்கும் கோஷ்டி
வடமாநில பிள்ளை பிடிப்பவர்கள் பற்றி வாட்ஸ் அப்பில் பரவிய தகவலால் சில அப்பாவிகள் உள்ளூர் மக்களிடம் சிக்கி சின்னாபின்னமான கதைகளை நாம் பார்த்திருக்கிறோம். 'புற்றுநோயா! கவலையே வேண்டாம்'' என்கிற தலைப்பில் சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி தீயாகப் பரவியது. அகத்திக் கீரை தொடங்கி ஒருசில பொருட்களைப் பட்டியலிட்டு அவற்றை வேகவைத்துக் குடித்தால் புற்றுநோய் சுத்தமாகக் குணமாகிவிடும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பரபரப்பான பலரும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை தொடர்புகொள்ள ‘'அட... வேலைவெட்டி இல்லாத எங்க பையன் ஏதோ விளையாட்டா எதையோ எழுதிட்டான்'' என எதிர்முனையில் விளக்கம் கிடைக்க, தொடர்பு கொண்டவர்கள் தலையில் அடித்துக் கொண்டார்கள்.
ஓவர் டோஸ் வாந்திகள்
சட்டசபை தேர்தல் நெருங்க, நெருங்க 'வாட்ஸப் வதந்திகள்' கொரானா வைரஸ் மாதிரி தாறுமாறாகப் பரவ வாய்ப்பு இருக்கிறது. ' தினமும் இரவு 10 திருக்குறள்களை சொல்லிவிட்டுத்தான் மோடி உறங்கச் செல்கிறார், சேக்கிழாரின் கம்பராமாயணத்திற்கு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக எடப்பாடி விளக்கவுரை எழுதிக்கொண்டிர்ருக்கிறார்' என்கிற அளவிற்கு வாட்ஸ் அப் வதந்திகள் விஸ்வரூபம் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
விஸ்வரூப வதந்திகள்
உச்சபட்சமாக ‘நாகரீமான பேச்சுக்காக ஹெச்.ராஜாவுக்கு, ராஜேந்திர பாலாஜிக்கு சர்வதேச விருது கிடைத்திருக்கிறது' என்கிற ரேஞ்சுக்குக் கூட வாட்ஸ் அப் வதந்திகள் விஸ்வரூபம் எடுக்கக் கூடும். தேர்தல் நெருங்க நெருங்க நம்ம அரசியல்வாதிகள் கத்துகிட்ட மொத்த வித்தையையும் இந்த முறை வாட்ஸ் அப்பில்தான் இறக்குவார்கள் போல் தெரிகிறது. எனவே நாம தான் திடீர் அதிர்ச்சிகளுக்கு ஆளாகாம சூதானமா இருந்து உயிர்பிழைச்சிக்கணும்.
பாலையும், தண்ணீரையும் பக்குவமாகப் பிரித்தெடுக்கும் அன்னப்பறவை போல தமிழ்ச்சமூகம் செயல்பட வேண்டிய நேரம் இது.
உஷாரய்யா...உஷாரு!
- கௌதம்