சேலம் தலித் இளைஞர் மர்ம மரணம்... வாட்ஸ் அப்பில் உலா வரும் ஆடியோவால் பரபரப்பு!
ஈரோடு: சேலம் தலித் இளைஞர் மரணம் தொடர்பாக வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ உலா வருகிறது. காதல் விவகாரம் தொடர்பாக அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில் இந்த ஆடியோவால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கோகுல்ராஜ் காதல் விவகாரத்தில் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்று புகார் எழுந்துள்ளது.
எனவே, அவரது உடலைப் பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்தப் பிரேத பரிசோதனை அறிக்கை திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், கோகுல்ராஜ் மரணம் தொடர்பாக வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சம்பவத்தன்று நடந்தது என்ன என்பது குறித்து, இறந்துபோன கோகுல்ராஜின் சகோதரரிடம் சுவாதி கூறுவது போல் உள்ளது.
அந்த ஆடியோவின் விபரமாவது:-
கோகுல்ராஜ் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுப்பதற்காக திருச்செங்கோடு வந்திருந்தார். பணத்தை வாங்கிய பிறகு இருவரும் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றோம். பின்னர் கோயிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது போலீஸ்காரர் மற்றும் மூன்று பேர் வந்து எங்களிடம் விசாரித்தனர். விசாரித்த பிறகு யுவராஜ் அழைக்கிறார் வா என்று கூறி கோகுல்ராஜை அழைத்து சென்றுவிட்டனர்.
பின்னர் என்னை போலீஸ்காரர் மற்றும் சிலர் அழைத்துக்கொண்டு மலையடிவாரத்திற்கு வந்தனர். அப்போது, நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா என்று கேட்டனர். இல்லை என்று கூறினேன். ஆனால் கோகுல்ராஜ் நீங்கள் இருவரும் காதலிப்பதாக கூறுகிறான் என்று கூறினர். கண்டிப்பாக அப்படி கூறியிருக்க மாட்டான். நாங்கள் இருவரும் நண்பர்களாவே பழகிவந்தோம். அப்படி இருக்கையில் காதலிப்பதாக கூறியிருக்க மாட்டான் என்றும் நண்பர்கள் எப்படி காதலிக்க முடியும் என்றும் கேட்டேன்.
பின்னர் மலையடிவாரம் வந்ததும் காரில் கோகுல்ராஜை ஏற்றிச்சென்றனர். என்னிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு என்னை அனுப்பி விட்டனர். மாலையில் என் ஊருக்கு வந்து செல்போனை கொடுப்பதாக கூறினர். இதையடுத்து நான் வீட்டிற்கு சென்றுவிட்டேன்' என இவ்வாறு அந்த உரையாடலில் உள்ளது.
இது உண்மையாகவே சம்பந்தப்பட்டவர்கள் பேசியது தானா அல்லது போலியா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த ஆடியோவில் உள்ள தகவல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கோகுல்ராஜின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.