சென்னையை மூழ்கடித்த செம்பரம்பாக்கம்.. திக்குத் தெரியாமல் தவித்துப் போன தலைநகரம்!
சென்னை: நவம்பரில் உலுக்க ஆரம்பித்த பேய் மழை சென்னையை டிசம்பர் தொடக்கத்தில் திக்குமுக்காட வைத்து விட்டது.
சென்னை மியாட் மருத்துவமனையில், வெள்ளத்தால் ஏற்பட்ட மின் தடை காரணமாக 18 நோயாளிகள் செயற்கைச் சுவாசக் கருவிகள் செயலிழந்ததால் பரிதாபமாக உயிரிழந்தனர்.
செட்டி நாட்டரசர் எம்.ஏ.எம். ராமசாமியும் இந்த சோக மாதத்தில்தான் மரணமடைந்தார்.
வெள்ளத்தில் மிதந்த சென்னை
டிசம்பர் 1ம் தேதி விடிய விடிய பெய்த முதல் நாள் மழையால் நகரமே ஸ்தம்பித்துப் போனது. நீர் நகரமாக மாறியது. செம்பரம்பாக்கத்திலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நகரையே மூழ்கடித்தது.
மழை நாளில் மரணித்த விக்கிரமன்
டிசம்பர் 1ம் தேதி சென்னையை வெள்ளம் மூழ்கடித்த நிலையில், பிரபல எழுத்தாளர் விக்கிரமன் சென்னையில் மரணமடைந்தார்.
செட்டி நாட்டரசர் மரணம்
டிசம்பர் 2ம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரும் செட்டி நாட்டு அரசர், பிரபல தொழிலதிபருமான எம்.ஏ.எம். ராமசாமி சென்னையில் மரணமடைந்தார்.
ஆஸ்கர் பிஸ்டோரியஸ் குற்றவாளி
டிசம்பர் 3ம் தேதி தென் ஆப்பிரிக்க பாராலிம்பிக் சாதனையாளர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தனது காதலியைக் கொன்ற வழக்கி் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார்.
18 நோயாளிகள் பலி
டிசம்பர் 4ம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் பலத்த வெள்ளம் காரணமாக மின்தடை ஏற்பட்டதால் ஒரே நாளில் 18 நோயாளிகள் செயற்கைச் சுவாசக் கருவிகள் செயலிழந்ததன் காரணமாக உயிரிழந்தனர்.
சல்மான் விடுதலை
டிசம்பர் 10ம் தேதி 2002 கார் விபத்தில் குற்றவாளி என்று அறிவித்து கீழ் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பையும், அது அளித்த 5 ஆண்டு தண்டனையையும் மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து நடிகர் சல்மான் கானை விடுதலை செய்து உத்தரவிட்டது.
சவூதி பெண்களுக்கு வாக்குரிமை
டிசம்பர் 12ம் தேதி சவூதி அரேபியாவில் முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டு அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் முதல் முறையாக வாக்களித்தனர். மேலும் இத்தேர்தலில் பெண்கள் முதல் முறையாக போட்டியிடவும் செய்தனர். அதில் 20 பேர் வெற்றியும் பெற்று புதிய வரலாறு படைத்தனர்.
ஒரு மாத விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு
டிசம்பர் 14- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு மாத கால மழை வெள்ள விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன.
கெய்ல் சாதனை
டிசம்பர் 19 - மேற்கு இந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் டுவென்டி 20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்தார். இன்று நடந்த ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் கிரிக்கெட் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி சார்பில் ஆடிய கெய்ல் இரு சிக்சர்களை விளாசி தனது மொத்த சிக்சர்கள் எண்ணிக்கையை 600 என்று உயர்த்தி இந்த சாதனையைப் படைத்தார். டுவென்டி 20 போட்டிகளில் கெய்ல் 653 பவுண்டரிகளையும் (4) விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்பயா குற்றவாளி விடுதலை
டிசம்பர் 20 - நிர்பயா என்கிற ஜோதி சிங் பலாத்கார கொடூர வழக்கில் இளம் குற்றவாளி ரகசியமான முறையில் விடுதலை செய்யப்பட்டார். அவரை விடுவிப்பதை தடை செய்ய முடியாது என்று டெல்லி ஹைகோர்ட்டும், சுப்ரீ்ம் கோர்ட்டும் கூறி விட்டன. இளம் குற்றவாளியின் விடுதலையை எதிர்த்து நிர்பயாவின் தாயார் டெல்லியில் போராட்டத்தில் குதித்தார்.
அழகிய குழப்பம்
டிசம்பர் 21 - லாஸ்வேகாஸில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இறுதிச் சுற்றில் பட்டம் அறிவிக்கப்பட்டபோது பெரும் குழப்பம் ஏற்பட்டது. வெற்றி பெற்ற மிஸ் பிலிப்பைன்ஸ் பியா அலோன்சாவுக்குப் பதில் கொலம்பியா அழகியின் பெயரை தொகுப்பாளர் அறிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் அவரிடமிருந்து பட்டத்தைப் பறித்து பிலிப்பைன்ஸ் அழகிக்குச் சூட்டியதால் களேபரமாகிப் போனது விழா.
கீர்த்தி ஆசாத் நீக்கம்
டிசம்பர் 23- மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மீது ஊழல் புகார் சுமத்திய பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மோடியின் அதிரடி பாக். பயணம்
கிறிஸ்துஸ் தினமான டிசம்பர் 25ம் தேதி ஆப்கானிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பும் வழியில் அதிரடியாக லாகூர் சென்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பைச் சந்தித்தார் பிரதமர் மோடி.
துப்பினார் விஜயகாந்த்!
டிசம்பர் 27ம் தேதி சென்னையில் தன்னைச் சந்தித்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்க முடியாத விஜயகாந்த், பத்திரிகைகாரங்களா நீங்க....தூ....... என முகத்தில் காறித்துப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சவூதியேலேயே பெட்ரோல் விலை உயர்வு
உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான சவூதி அரேபியாவில் டிசம்பர் 29ம் தேதி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது.
மறைந்தார் தமிழண்ணல்
டிசம்பர் 29ம் தேதி முதுபெரும் தமிழறிஞர் தமிழண்ணல் (வயது 88) மதுரையில் காலமானார்.
பத்திரிகையாளர்கள் மீது தேமுதிகவினர் தாக்குதல்
டிசம்பர் 31ம் தேதி சென்னையில் விஜயகாந்த் வீட்டை முற்றுகையிடச் சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது தேமுதிக எம்.எல்.ஏ பார்த்தசாரதி தலைமையில் தேமுதிகவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.