அடேங்கப்பா எப்படி மிதந்தோம் போன வருஷம்.. மறக்க முடியுமா... 2015 டிசம்பர் 1 பிளாஷ்பேக்!
கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் இறுதியில் தொடங்கி டிசம்பர் 2ம் தேதி வரை இடைவிடாமல் பெய்த 48 மணி நேர மழையை யாராலும் மறந்திருக்க முடியாது. அதே நாளில் இப்போது மீண்டும் ஒரு புயல் கரையைக் கடக்க உள்ளது.
சென்னை: 2015ம் ஆண்டு, வடகிழக்கு பருவமழை வந்த சுவடு தெரியாமல் பெய்து விட்டு போன நிலையில் டிசம்பரில் பெய்த வரலாறு காணாத மழையையும், அதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பையும், சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் அத்தனை எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். நவம்பர் 30ம் தேதி மாலையில் தொடங்கிய மழை டிசம்பர் 2ம் தேதி அதிகாலை வரை நீடித்தது.
வடகிழக்கு பருவமழை துவங்கியதில் தொடங்கி விட்டு விட்டு பெய்த மழைக்கு நவம்பர் 25ம் தேதிக்கு முன்பாகவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்த ஏரிகள் நிரம்பி விட்டன.
நவம்பர் 30 தொடங்கி டிசம்பர் 2ம் தேதி வரை விடாமல் கொட்டிய மழைக்கு சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக இருந்த ஏரிகள் அனைத்தும் நிரம்பி உடையும் நிலையை அடைந்தது. செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் திறக்கப்பட்ட தண்ணீர் அடையாறு, கூவம் ஆறுகளை தெறிக்க விட்டது. ஆற்றங்கரையோர மக்கள் கடும் வெள்ள பாதிப்பை சந்தித்தனர்.
மூழ்கிய சாலைகள்
சென்னையில் சாலைகள் எல்லாம் மழை நீரில் மூழ்கி, போக்குவரத்து கிட்டத்தட்ட முழு பாதிப்பைச் சந்தித்து இருந்தது. ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கி ரயில் போக்குவரத்து முடங்கியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் குடியேறினர்.
படகு போக்குவரத்து
கடலில் ஓடிய படகுகளை எடுத்துக்கொண்டு வந்து மீனவர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர். பேரிடர் மீட்புக்குழுவினர் தங்களின் உயிரைப் பணயம் வைத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு கரை சேர்த்தனர்.
இருளில் மூழ்கிய நகரம்
பெரும்பாலான குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தன. நகரமெங்கும் வெள்ளநீர் சூழ, வீட்டில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மொட்டை மாடியில் தஞ்சம்
சென்னை நகரமே நரகமானது. வெள்ளம் வீட்டிற்கு நுழையவே மொட்டைமாடிகளில் மக்கள் தஞ்சமடைந்தனர். காணும் இடமெங்கும் தண்ணீர் மயமாக காட்சியளித்தது. வீட்டை சுற்றி தண்ணீர் இருந்தும் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி மக்கள் சிரமப்பட்டனர்.
உணவுப் பொட்டலங்கள்
உணவுக்கும் குடிநீருக்கும் மக்கள் தவிக்க உதவி செய்ய பல பகுதிகளில் இருந்தும் கரங்கள் நீண்டன. மீட்புக்குழுவினரின் மூலம் ஹெலிகாப்டரில் வந்து மொட்டை மாடியில் தஞ்சமடைந்தவர்களுக்கு உணவும், குடிநீரும் விநியோகம் செய்யப்பட்டது.
நூற்றுக்கணக்கானோர் மரணம்
நோயாளிகள் மருந்து மாத்திரைகளுக்காகவும் குழந்தைகள் பாலுக்காகவும், குடிநீருக்காகவும், உணவுக்காகவும் தவித்தனர். திடீர் மழை வெள்ளத்திற்கு சென்னையில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
வரலாற்று சாதனை
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது நவம்பர் 1ந்தேதி முதல் 30ம்தேதி நள்ளிரவு 12 மணி வரை சென்னையில் அதிகபட்சமாக 118 சென்டி மீட்டர் மழை பெய்தது. இதற்கு முன்பு கடந்த 1918ஆம் ஆண்டு சென்னையில் நவம்பர் மாதத்தில் 108.8 சென்டி மீட்டர் மழை பெய்து இருந்தது. கடந்த ஆண்டு மழை 97 ஆண்டு கால சாதனையை முறியடித்தது.
நாடா புயல்
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் மிகக் குறைந்த அளவே மழை பதிவாகியுள்ளது. இது தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் நாடா புயலால் டிசம்பர் 1ம் தேதி முதல் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று ஆறுதல் சொன்னது வானிலை மையம். அதன்படி இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழை வெள்ளத்தை ஏற்படுத்தாது என்று நம்பிக்கை கொடுத்துள்ளனர் வானிலை ஆய்வாளர்கள்.