ஹசீனாவின் தலைமுடியை கொத்தோடு பிடித்து இழுத்து அடித்த காங்கிரசார்!
சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத் தலைமுடியை கொத்தோடு பிடித்து இழுத்து அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு... பெண்கள் சண்டை போட்டை கை தலைமுடிக்குத்தான் போகும். அப்படித்தான் சத்தியமூர்த்தி பவனில் நடந்த சண்டையில் ஹசீனா சையத் தலைமுடியை கொத்தோடு பிடித்து இழுத்து அடித்துள்ளனர்.
கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வந்த ராகுல் காந்தி சத்தியமூர்த்தி பவனுக்கும் சென்றார். ராகுல் காந்தி வந்தபோது திருவள்ளூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் செயலாளர் கவுரி கோபால் சார்பில் வைக்கப்பட்ட வரவேற்பு பேனரில் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத்தின் படம் இடம் பெறவில்லை.
இதனால் கெளரி கோபாலை திருவள்ளூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் செயலாளர் பொறுப்பில் இருந்து ஹசீனா சையத் நீக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஹசீனா சையத், தன்னை பகைத்துக் கொண்டால் என்ன நிகழும் என்று தற்போது கௌரி கோபாலுக்கு புரிந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கௌரி கோபால், மகிளா காங்கிரசின் அகில இந்திய செயலாளர் ஹசீனாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடும் சண்டை
அப்போது கௌரிக்கு ஆதரவாக மகிளா காங்கிரசின் தமிழக செயலாளர் ஜான்சிராணியும், ஹசீனாவுடன் தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் தமிழக மகிளா காங்கிரஸ் செயலாளர் ஜான்சிராணியும், பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கௌரி கோபாலும் இணைந்து ஹசீனாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
நியாயம் கேட்ட கணவர்
அப்போது அங்கு வந்த ஹசீனாவின் கணவர் உமர், தனது மனைவியை தாக்கிய ஜான்சிராணி மற்றும் கௌரி கோபாலிடம் விளக்கம் கேட்டுள்ளார். இதனால் அங்கு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.
ஆபாச பேச்சு
ஜான்சிராணி மற்றும் கௌரி கோபாலை ஹசீனாவின் கணவர் உமர் ஆபாசமாக பேசி தள்ளிவிட்டார். இதில் ஜான்சிராணி காயமடைந்தார். பொங்கியெழுந்த ஜான்சி ராணி மற்றும் கௌரி கோபாலுடன் இணைந்து கொண்டு ஹசீனாவின் கணவரை சரமாரியாக அடிக்கத் தொடங்கினர்.
தாக்கிய பெண்கள்
ஒரு கட்டத்தில் ஜான்சிராணி மற்றும் கௌரி கோபாலிடம் இருந்து தனது கணவர் உமரை மீட்டு ஹசீனா சையத் அங்கிருந்து தப்பி ஓடினார். அப்படியும் விடாமல் ஹசீனாவின் கணவர் உமரை ஜான்சிராணியும், கெளரி கோபாலும் விரட்டி விரட்டி தாக்கினர்.
கொத்தோடு இழுத்த பெண்கள்
விடாமல் விரட்டி ஹசீனாவின் தலைமுடியை கொத்தோடு பிடித்து இழுத்தனர். சிலர் பாய்ந்து வந்து ஹசீனாவை காப்பாற்றினர். இந்த மோதலை அடுத்து சத்திய மூர்த்தி பவனில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சண்டை நடக்கலையே
மோதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், சத்தியமூர்த்தி பவனில் சண்டையெல்லாம் நடக்கலையே என்றார். பின்னர் சுதாரித்து மகளிர் காங்கிரஸ் அணியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.