அரசு ஊழியர்களையே ஏற்காத கர்நாடகாவில் தமிழரை துணைவேந்தராக்க முடியுமா? சூரப்பா நமக்கு 'பேக்காப்பா?'
Recommended Video
சென்னை: கர்நாடகாவில் தமிழ் மாநிலத்தை சேர்ந்தவர்களை உயர் பதவிகளில் அமர்த்தாத போது, தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக சூரப்பா என்ற கர்நாடகாவை சேர்ந்த கல்வியாளர் நியமிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்த இந்த நியமனம் தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பிவிட்டுள்ள நிலையில், அதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த விளக்கம் அடடே ரகம்.
இஸ்ரோ தலைவராக சிவன் என்ற தமிழர் உள்ளார், பிரதமர் அலுவலகத்தில் தமிழர் உள்ளார், நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களாக தமிழர்கள் உள்ளனர் என்று கூறினார் தமிழிசை.
மாநில கட்டுப்பாடு
இஸ்ரோவும், பிரதமர் அலுவலகமும் எந்த ஒரு மாநிலத்தாலும் நிர்வகிக்கப்படுபவை இல்லை. பிரதமர் அலுவலகம் இந்த நாட்டுக்கே பொதுவானது. இஸ்ரோ தேசிய அமைப்பு. ஆனால், அண்ணா பல்கலைக்கழகமும், பெங்களூர் பல்கலைக்கழகமும் இப்படியான வரைமுறைக்குள் வருவது கிடையாது. நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களாக தமிழர்கள் உள்ளனர் என்று கூறிய தமிழிசை, எந்த மாநிலத்தில் அப்படி உள்ளனர் என்ற விவரத்தை ஏனோ தெரிவிக்கவில்லை.
தமிழகத்தில் அறிவாளிகள் இல்லையா
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களில் 50 சதவீதம் பேர் முதல் தகுதி தேர்விலேயே தேர்ச்சி பெறுவதில்லை என்பதால்தான், தேடி பிடித்து சூரப்பாவை துணை வேந்தராக நியமித்துள்ளதாகவும் கூறினார் தமிழிசை. அப்படியென்றால், கல்வியறிவில் தேசிய அளவில் பெரும் முன்னேற்றம் கண்ட தமிழகத்தில் சூரப்பாவுக்கு ஈடாக அறிவிற் சிறந்த துணை வேந்தர்களே இல்லை என்கிறாரா தமிழிசை? இதைவிட தமிழகத்திற்கும், வள்ளுவன் காலம் தொட்டு வான்புகழ் கொண்ட அதன் அறிவிற் சிறந்த சான்றோருக்கும் இழுக்கு தேவையா?
ஆந்திராவின் சூர்ய நாராயண சாஸ்திரி
மேலும், ஆளுநர் மேற்கொண்டுவரும் துணை வேந்தர் நியமனங்கள், சர்ச்சையை ஏற்படுத்துவது இது முதல் முறையும் கிடையாது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு ஆந்திராவை சேர்ந்த தம்மா சூர்ய நாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டார். இவர் இந்துத்துவாவாதி என எதிர்க்கட்சிகளால் குற்றம்சாட்டப்படுபவராகும். திமுக ஆட்சி காலத்தில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவராகும்.
கேரள பெண்மணி
தமிழ்நாடு இசை பல்கலைக்கழகத்திற்கு கேரளப் பெண்மணி பிரமிளா தேவியை நியமனம் செய்ததும் இதே ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தான். முக்கியமான பல பல்கலைக்கழகங்களிலும் பிற மாநிலத்தவர்கள் உயர் பதவிகளில் அமர வைக்கப்பட்டுள்ளனர். "தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஒருவர் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட வேண்டுமானால் அவருக்கு அடிப்படைத் தமிழ் மொழியறிவு இருக்க வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. உதவிப் பேராசியருக்கே இந்த நிலை எனும் போது தமிழே தெரியாதவரை துணைவேந்தராக நியமிப்பது எந்த வகையில் நியாயம்?" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்கும் கேள்வியை எளிதாக புறம் தள்ள முடியாது.
கர்நாடகாவில் முடியுமா?
தமிழகத்தில் தலைசிறந்த கல்வியாளர்கள் ஏராளமாக இருக்கும் போது இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவரை இறக்குமதி செய்து துணைவேந்தராக நியமிப்பதை எப்படி ஏற்க முடியும். ஏனெனில் இத்தகைய அவமதிப்புகளும், அத்துமீறல்களும் தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடக்காது. கர்நாடகத்தில் உள்ள ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பதவி வாங்கித் தர தமிழக ஆளுனரால் முடியுமா என்றால் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும்.
சுயமரியாதைக்கு சவால்
தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஒருவர்பின் ஒருவராக அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களை நியமிப்பது தமிழர்களின் தன்மானம் மற்றும் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகும். கர்நாடகத்தில் ஒரு தமிழரை அம்மாநில வரம்பில் உள்ள ஒரு பிரதான உயர் பதவியில் ஏற்றதாக வரலாறு கிடையாது. அங்குள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான ஏஜி அலுவலகத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து பலரை இடமாற்றம் செய்தபோது அதைக் கண்டித்து எதிர்த்துப் போராட்டமே நடைபெற்றது.
அரசு ஊழியர்கள் நிலை
ஐபிஎஸ், ஐஏஎஸ் போன்ற மத்திய அரசு பணியில் உள்ள தமிழ் அதிகாரிகள் கூட கர்நாடகாவில் மாற்றாந்தாய் பிள்ளை போலத்தானே நடத்தப்படுகிறார்கள். 1991ம் ஆண்டு காவிரி நடுவர்மன்ற இடைக்கால தீர்ப்பு வெளியான காலகட்டத்தில் பெங்களூரில் தமிழருக்கு எதிரான வன்முறை வெடித்தது. அப்போது தமிழகத்தை சேர்ந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரிதான் போலீஸ் கமிஷனராக இருந்தார். ஆனால், அப்போது அவர் கூறியதை ஏற்று தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க ஒரு கான்ஸ்டபிள் கூட முன்வரவில்லை என்ற பேச்சு அம்மாநிலத்தில் இன்னும் எதிரொலிக்கிறது. அரசு ஊழியர்களையே ஏற்க மனம் இல்லாத மாநிலம் கர்நாடகம். ஆனால் தமிழகத்தில் மட்டும் எல்லாமே ஏற்கப்பட வேண்டுமா?