கடும் பனியில் சிக்கி அப்படியே 'ஷாக்' ஆகி நடுங்கிய சென்னைவாசிகள்.. அதுவும் ஏப்ரல் மாதத்தில்...!
சென்னை: கொளுத்தும் கோடையில் சென்னையில் மழை வருவதே ஒரு மகிழ்ச்சியான விசயம்... ஆனால் உதகை, காஷ்மீரைப் போல சென்னையில் ஒரு பனிபொழியும் காலம் வந்தது என்றால் நம்ப முடிகிறதா?
ஆனால், இது டிசம்பர் மாதத்தில் அல்ல கடும் வெப்பம் நிலவும் கோடை காலமான ஏப்ரல் மாத கடைசியில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
சென்னை என்றாலே அதி வெப்பமான பிரதேசம் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருப்பார்கள். எப்போதுமே வெப்பநிலை 25 டிகிரிக்கு குறையாமல் இருக்கும் (90 டிகிரி பாரன்ஹீட்) ஆனால் கடும் வெப்பம் நிலவும் ஏப்ரல் மாதத்தில் மைனஸ் 3 டிகிரி வெப்பநிலைக்கு வந்த காலமும் உண்டு.
இது இன்று நேற்றல்ல... சரியாக 200 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1815 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் இந்த அதிசய நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
மைனஸ் 3 டிகிரி வெப்பநிலை
1815, ஏப்ரல் 24ஆம் தேதி காலை வெப்ப நிலை 11 டிகிரி செல்சியஸாக இருந்தது. ஆனால் ஏப்ரல் 28-ம் தேதி மைனஸ் 3 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை குறைந்தது. பனிப்பொழிவு கூட ஏற்பட்டதாம். ஆனால் பனிப்பொழிவு குறித்து புள்ளிவிவரத் தகவல் ஏதும் இல்லை.
எல்லாத்துக்கும் காரணம் அந்த எரிமலை
1815 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் தொலைதூரம் இருந்த மவுண்ட் தம்போரா என்ற எரிமலை வெடித்துச் சிதறியது. மவுண்ட் தம்போரா இந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் உயரமான சிகரம். 4300 மீ உயரம் கொண்டது இந்த மவுண்ட் தம்போரா.
மாபெரும் வெடிப்பு
1815, ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் எரிமலைக் குழம்பான லாவா வெடித்துக் கிளம்பியது. இந்த எரிமலை வெடித்த சப்தம் சுமார் 2,000 கிமீ வரை கேட்டது என்று கூறப்படுகிறது. லாவா வழிந்து ஓடியதிலும், வெடிப்பின் தீவிரத்திலும் சுமார் 12,000 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்று வரையிலும் மவுண்ட் தம்போரா எரிமலை வெடிப்புதான் எரிமலை வெடிப்பு வரலாற்றில் மிகப்பெரியதாக கருதப்பட்டு வருகிறது.
வெடிப்பால் வந்த தட்பவெப்ப மாற்றங்கள்
‘தம்போரா ஐரோப்பாவிலும் உலகிலும் ஏற்படுத்திய மாற்றங்கள்' பற்றி கிலன் டி'ஆர்சி உட் என்பவர் எழுதிய கட்டுரையில், "தம்போரா வெடிப்பின் சாம்பல் புகை மண்டலத் திரை மேகத்துக்கும் மேல் மிகப்பெரியதாகக் காணப்பட்டது. காற்றுடன் மேற்கு நோக்கி அது நகரத் தொடங்கியது... தம்போராவின் சாம்பல் புகை வங்காள விரிகுடா பக்கம் சில நாட்களில் வந்து சேர்ந்தது" என்று விவரித்துள்ளார்.
வானியல் மாற்றங்கள்
தம்போரா எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வானிலை மாற்றங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உலகம் முழுதும் 70,000த்துக்கும் மேற்பட்டோர் அழிந்தனர் என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பரவிய பஞ்சம்
தம்போராவின் சாம்பல் மேகம் உலகம் முழுதும் பரவி 1816-ம் ஆண்டை ‘கோடையில்லாத ஆண்டாக' மாற்றியது. சென்னை உட்பட இந்தியாவின் பெரும்பகுதிகளில் பருவமழை இல்லை. பயிர் செய்தல் கடும் தோல்வி கண்டது. காலரா, பஞ்சம் இந்தியாவில் பரவியது. இப்போது அந்தப் பெரும்பஞ்சம் எரிமலை நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்டதாக தற்போது நிபுணர்கள் கூறுகின்றனர்.
உறைந்த சென்னை
இதன் விளைவை சென்னைதான் முதலில் உணர்ந்ததாக கூறப்படுகிறது. சென்னையின் வெப்ப நிலை பூஜ்ஜியத்துக்கும் கீழ் இறங்கியதாம். எரிமலை சாம்பல் ராட்சத புகையில் உள்ள காற்றின் மூலக்கூறுகள் பூமியிலிருந்து வெப்பத்தை உறிஞ்சிக் கொண்டதாம். ஆனால் அப்போது சென்னையை நிர்வகித்து வந்த கிழக்கிந்திய கம்பெனியின் எந்த ஒரு ஆவணமும் இது பற்றி எதையும் பதிவு செய்யவில்லை. சுனாமி பற்றி குறிப்புகளும் இல்லை.
அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு
தம்போரா எரிமலை வெடிப்புக்குப் பிறகு 1815ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜாவாவிலிருந்து காதரீனா என்ற கப்பல் சென்னைக்கு வந்தது. அப்போது தி மெட்ராஸ் கூரியர் அதன் மாஸ்டரை பேட்டி கண்டனர். அவர் தம்போரா எரிமலை சாம்பலை ஒரு பையில் கொண்டு வந்தார். அது பிறகு கொல்கத்தாவுக்கு மேலும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை 1815 ஏப்ரலில் சென்னையில் மைனஸ் 3 டிகிரிக்கு வெப்ப நிலை குறைந்ததை தம்போரா எரிமலை வெடிப்புடன் தொடர்புபடுத்தவில்லை.
சும்மா ஜில்லுன்னு இருக்கு
1815ல் பனி பெய்ததோ இல்லையோ சில தினங்களுக்கு பெய்த கோடை மழை சென்னையின் பருவநிலையை கொஞ்சம் ஜில்லென்று மாற்றிவிட்டுத்தான் போயிருக்கிறது என்று இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உணர்கின்றனர் சென்னைவாசிகள்.