புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் குத்துச்சண்டை பிதாமகன் முகமது அலியும்...
சென்னை: குத்துச்சண்டையின் மீது தமிழக மக்களுக்கு தனி மரியாதை உள்ளது. இன்றைக்கு கிரிக்கெட் விளையாட்டின் ஏற்பட்டிருக்கும் காதலை விட குத்துச்சண்டை மீது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய காதல் உள்ளது என்பதனால்தான் குத்துச்சண்டை பற்றி எடுக்கப்படும் திரைப்படங்கள் வெற்றி பெறுகின்றன. குத்துச்சண்டை போட்டிகளின் பிதமகன் முகமது அலியின் மரணம் இன்றைக்கு பல ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது அவர்களுக்காக இந்த சின்ன பிளாஸ்பேக்.
நாக் அவுட் நாயகன் என்று மக்களால் போற்றப்பட்ட முகமது அலியும், புரட்சித்தலைவர் என்று தமிழக மக்களால் போற்றப்படும் எம்.ஜி.ஆரும் ஜனவரி 17ம் தேதி பிறந்தவர்கள். இந்த ஒற்றுமையினால்தான் என்னவோ எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது 1980ம் ஆண்டு தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர்கள் சங்கத்துக்காக நிதி திரட்டும் வேடிக்கை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்திருந்தார் முகமது அலி .
முகமது அலியுடன் போட்டியில் சண்டையிட முன்னாள் ஹெவிவெயிட் சாம்பியனான ஜிம்மி எல்லிஸ் என்பவரும் உடன் வந்திருந்தார்.முதல்வர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், ரசிகர்களும் முகமது அலிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தன்னைக்காண கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை கண்டு மகிழ்ந்த முகமது அலி, என்னை காணவும், வரவேற்கவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பதை பார்த்து நெகிழ்ச்சி அடைகிறேன் என்றார். என்மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை எனது வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக போற்றிப் பாதுகாப்பேன் என தழுதழுத்த குரலில் குறிப்பிட்டார்.
ஜவகர்லால் நேரு ஸ்டேடியம்
அன்றைய தினம் ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் சுமார் இருபதாயிரம் சென்னைவாசிகள் திரண்டிருந்தனர். முகமது அலி உள்ளே நுழைந்த போது அரங்கம் முழுவதும் கரகோஷங்களால் நிரம்பியது. ஜிம்மி எல்லிஸ் உடன் மோதிய முகமது அலி சென்னையில் பயிற்சிமுறை பாக்சர்களாக இருந்த சிலருடனும் முகமது அலி விளையாட்டாக மோதினார்.
தமிழக குத்துச்சண்டை சாம்பியன்
தமிழ்நாட்டின் அப்போதைய மாநில குத்து சண்டை சாம்பியன் - திருவள்ளூரை சேர்ந்த ராக்கி பிராஸ் என்பவருடன் மோதினார் முகமது அலி. முகமது அலியுடன் மோதினார் என்கிற ஒரே காரணத்திற்க்காக எட்டாவது வகுப்பு கூட முடிக்காத ராக்கி பிராஸ்க்கு அதன் பின் தெற்கு ரயில்வேயில் கலாசி வேலை கிடைத்தது. எக்மோர் ரயில்வே நிலையத்தில் கலாசியாக வேலை பார்த்து பின் பயணிகளுக்கு வழிகாட்டுபவராக உயர்ந்த ராக்கி பிராஸ் பிற்காலத்தில் இதை நினைவு கூர்ந்துள்ளார்.
சிறுவனுக்கு மண்டியவர்
கடைசியாக பத்துவயது சிறுவன் மேடை ஏறினான். அவனுக்கு போக்குகாட்டும் விதமாக துள்ளிக்குதித்தபடி மேடையை சுற்றிச்சுற்றிவந்த பின்னர், அவனை தனது முகத்தில் குத்துமாறு கூறிய முகமது அலி, அவனது உயரத்துக்கு தக்கவாறு முழங்காலிட்டு அமர்ந்தார்.
|
ஜாலி விளையாட்டு
அந்த சிறுவன் விட்ட குத்துகளில் இருந்து தனது முகத்தை லாவகமாக காப்பாற்றிக் கொண்ட முகமது அலி, பின்னர், மூலையில் இருந்த கயிற்றின்மீது சரிந்தவாறு நின்று, தனது வயிற்றில் குத்தும்படி கூறினார். சென்னைக்கு வந்த முகமது அலிக்கு மக்கள் கொடுத்த வரவேற்பும், அவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து கொடுத்த போஸ்களும், மறுநாள் ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தன.
மாலை அணிவித்த எம்.ஜி.ஆர்
சென்னையில் நடந்த முகமது அலியின் சண்டையைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு அந்த காலகட்டத்திலேயே ரூபாய் 100 அளவுக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாம். போட்டியில் வென்ற முகமது அலிக்கு எம்ஜிஆர் மேடைக்கு சென்று மாலை அணிவித்தார். பின்னர் முகமது அலியின் கையை உயர்த்திக்காட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
— KalaignarKarunanidhi (@kalaignar89) June 4, 2016 |
கருணாநிதியுடன் சந்திப்பு
போட்டிகள் முடிந்த பின்னர் முகமது அலி, திமுக தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக தன்னுடைய மனைவியுடன் சென்று சந்தித்தார்.
நானே பலசாலி
பத்திரிகையாளர் ஒருவர் முகமது அலியின் பலவீனம் குறித்து கேட்டதற்கு, இதுவரை நான் 49 போட்டிகளில் போட்டியிட்டு 32ல் வென்றுள்ளேன். என்னுடைய முகத்தைப் பாருங்கள். அதில் தழும்போ, காயமோ இல்லை. என் முகம் மிருதுவாகவும், தெளிவாகவும்தான் இன்னமும் இருக்கிறது. அதனால்தான் சொல்கிறேன். நானே பெரும் பலசாலி' என்று கூறி கை தட்டல் பெற்றாராம்.
சென்னை ரசிகர்களுக்கு இழப்பு
இன்றைக்கும் சென்னையில் முகமது அலியின் புகைப்படங்களை தங்களின் வீடுகளில் வைத்துள்ளனர் பாக்சிங் ரசிகர்கள். அவர்களுக்கு முகமது அலியின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.