திமுகவில் தலைவர் பதவி இருக்குமா.. அல்லது அதிமுக பாணிக்கு மாறுமா?
திமுகவின் தலைவர் பதவி நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
சென்னை: திமுகவில் தலைவர் பதவி நீடிக்குமா அல்லது அதிமுக பாணியில் செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த செவ்வாய் கிழமை அன்று மாலை மரணம் அடைந்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி வயோதிகம் காரணமாக மரணம் அடைந்தார்.
கருணாநிதியின் உடல், மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பல தலைவர்கள் இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக அஞ்சலி செலுத்தினார்கள்.
தலைவரா
திமுகவின் தலைவர் கருணாநிதி மரணம் அடைந்துவிட்டதால் அந்த பொறுப்பிற்கு புதிய பொறுப்பை தேர்வு செய்ய வேண்டும். தற்போது திமுக செயல்தலைவராக இருக்கும், ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்று அறிவாலய வட்டாரங்கள் பேசிக்கொள்கிறது.
சிக்னல் என்ன
இதற்கு சில அறிகுறிகளும் இன்றும் வெளியானது. கருணாநிதி மறைவை ஒட்டி திமுக செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி கூடுகிறது. அவர் மறைவிற்கு பின் முதல்முறையாக இந்த கூட்டம் கூடுகிறது. அதில் இது குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று காலையில் இருந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
கிடையவே கிடையாது
ஆனால் அந்த செய்தியை திமுக தரப்பு மொத்தமாக மறுத்துள்ளது. இந்த கூட்டத்தில் தலைவர் பதவி மாற்றம் இருக்காது என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டம் கருணாநிதிக்கான அஞ்சலி கூட்டம், அவரது புகழை நினைவு கூற நடத்தப்படும் கூட்டம் என்று திமுக தரப்பு முழு விளக்கம் அளித்துள்ளது. இதனால் ஸ்டாலின் தலைவராவது இப்போது நடக்காது என்று தெளிவாகியுள்ளது.
தலைவர் பதவி மாறுமா
இதற்கிடையே, அதிமுக வழியில் திமுகவும் நடக்குமா என்ற கேள்வியை சிலர் கேட்டு வருகின்றனர். அதாவது அதிமுகவில் தலைவர் பதவி கிடையாது. அண்ணாதான் நிரந்தர தலைவர் என்று கூறி தலைவர் பதவியையே உருவாக்கவில்லை எம்ஜிஆர். அது இப்போது வரையிலும் நீடித்து வருகிறது. கருணாநிதியின் தலைமைப் பதவிக்கு மதிப்பு கொடுத்து அதே பாணியில் செயல் தலைவர் பதவியை மட்டும் வைத்துக் கொண்டு திமுகவும் தலைவர் பதவியை காலியாக விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.