"சிலந்தியும், ஒட்டடைக் குச்சி"யும் ஒருவருக்கொருவர் சந்தித்து உருகிக் கொண்ட அந்த 1 நிமிடம்!
சென்னை: மு.க.ஸ்டாலின் பிறந்த நாளன்று பெரியார் திடலில் நடந்த நிகழ்வுகள் திமுக மற்றும் தி.க ஆகிய இரு தரப்பையும் நெகிழ வைத்துள்ளது. காரணம், மு.க.ஸ்டாலின் வருகை மற்றும் தி.க. தலைவர் கி.வீரமணியுடனான அவரது சந்திப்பும்.
அதிமுக ஆட்சியை வைத்தும், சசிகலா குரூப்பையும் வைத்தும் தி.க - திமுக இடையே சமீபத்தில் திடீர் மோதல் வெடித்தது. இரு தரப்பும் காரசாரமாக வாக்குவாதம் செய்து கொண்டன. திராவிட இயக்கத்தினரை இது அதிர்ச்சியுற வைத்தது.
தி.க.தலைவர் கி.வீரமணி காரசாரமான அறிக்கை விட அது திமுக தரப்பை சூடாக்கியது. இருப்பினும் பெரிய அளவில் எந்த மோதலும் வெடிக்காமல் அது தணிந்து காணப்பட்டது.
சட்டசபை அமளி
சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுக உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம்தான் தி.க. தலைவர் கி.வீரமணிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது. கருணாநிதி இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என்று அவர் வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.
சிலந்தியும் - ஒட்டடைக் குச்சியும்
இந்த விவகாரத்தை வைத்து திமுகவின் முரசொலியில் சிலந்தி என்ற பெயரில் கட்டுரைகள் வெளியாக, சூடாகிப் போன தி.க தரப்பு தனது விடுதலையில் ஒட்டடடைக் குச்சி என்ற பெயரில் பதில் கட்டுரைகள் போல மோதல் சூடு பிடித்தது.
இறங்கி வந்த மு.க.ஸ்டாலின்
இந்த மோதல் விஸ்வரூபம் எடுத்து விடுமோ என்ற அச்சம் எழுந்த நிலையில் மு.க.ஸ்டாலின் இறங்கி வந்தார். முரசொலியில் கட்டுரைகள் நின்றன. மேலும் பெரியவர் கி.வீரமணி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எனவே அவரை விமர்சிக்க மாட்டேன் என்றும் ஸ்டாலின் கூறினார். அதேபோல விடுதலையிலும் ஒட்டடைக் குச்சி கட்டுரைகள் நின்றன.
பெரியார் திடலில் நெகிழ்ச்சி
இந்தநிலையில்தான் ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி பெரியார் திடலுக்கு வருகை தந்தார். அங்கு கி.வீரமணியுடனான அவரது சந்திப்பு நெகிழ்ச்சிகரமாக இருந்தது. இருவரும் கருத்து வேறுபாடுகளை புறம் தள்ளி விட்டு உணர்ச்சிகரமாக அணுகிக் கொண்டனர். அந்த அன்பில் கருத்து மோதல்களும் அடித்துக் கொண்டு போய் விட்டனவாம்.
இப்படியே இருந்தா சரித்தான்.