வீரன், தின்னியன், மாமணி.. டிடிவி தினகரனை எப்படியெல்லாம் புகழ்ந்தார் நாஞ்சில் சம்பத் பாருங்க
Recommended Video
சென்னை: டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை கேட்போர் காதுகளே கூசும் அளவுக்கு புகழ்ந்துரைத்து வந்தவர், கண்கள் கூசும் அளவுக்கு புகழ்ந்து எழுதி வந்த நாஞ்சில் சம்பத் அவர் அணியில் இருந்து விலகியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனி கட்சியை சமீபத்தில் ஆரம்பித்தார் டிடிவி தினகரன். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள வசதியாக இதுபோன்ற தனி கட்சியை அவர் துவங்கியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், நாஞ்சில் சம்பத் இதற்கு முன்பாக தினகரன் பற்றி பேசிய புகழுரைகளில் சில உதாரணங்களை மட்டும் கொடுக்கிறோம். பாருங்கள்.
ஒரு ரீவைண்ட்
2017 மார்ச் 5: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாய் தளவாய் சுந்தரம் நியமனம் செய்யப்பட்டார். அவருக்காக நன்றி சொல்கிறேன் பேர்வழி என்று டிடிவி தினகரனை "வராது வந்த மாமணி" என்று நாஞ்சில் சம்பத் புகழ்ந்து தள்ளினார். "சிறையில் இருந்தாலும் சிந்தையெல்லாம் சிம்மாசனம் போட்டு இருக்கின்ற" கழகத்தின் பொதுச் செயலாளர் அவர்களுக்கும், வராது வந்த மாமணியாம் கழக துணை பொதுச் செயலாளர் எங்கள் திசையெல்லாம் தேன்சொரியும்" டிடிவி தினகரனுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன் என தீந்தமிழால் அர்ச்சனை செய்தார் நாஞ்சில் சம்பத்.
தின்தோள் மறவன்
மார்ச் 10, 2017: நாஞ்சில் சம்பத் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தது: திராவிட இயக்கத்தின் திருப்பத்திற்கும், விருப்பத்திற்கும் உரிய வரலாற்று சிறப்பு மிகுந்த மயிலை மாங்கொல்லையில் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் நேற்று ஆற்றிய உரை கழக தோழர்களுக்கும் அம்மாவின் பக்தர்களுக்கும் களிப்பையும் கரைகாணா உற்சாகத்தையும் தந்து விட்டது. மதிப்பிற்குரிய டிடிவி தினகரன் அவர்கள் வீரன் , தின்னியன், தின்தோள் மறவன் என்பதை நிரூபித்து விட்டார். இவ்வாறு வீரன், தின்னியன், தின்தோள் மறவன் என புகழ்ந்தார் நாஞ்சில் சம்பத்.
கிரிக்கெட்
ஜனவரி 22, 2018: கிரிக்கெட்டை விரும்புவது போல் தினகரனை இளைஞர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என கடலூரில் நடைபெற்ற கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார். ... டி.வி. தினகரனுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் நடந்தது. ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் கிடையாது. ஆனாலும் இளைஞர்கள் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள். அதேபோல் ஆட்சியில் இல்லாவிட்டாலும் தினகரனை இளைஞர்கள் விரும்புகிறார்கள் என்று தெரிவித்தார்.
இன்று விமர்சனம்
இன்று அளித்த பேட்டியில், அதே நாஞ்சில் சம்பத், தினகரன், தனது கட்சிக்கு அண்ணா பெயரையும், திராவிட பெயரையும் தவிர்த்து பகல் படுகொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.