எடப்பாடி பழனிச்சாமியை மேடையில் வைத்துக்கொண்டு பன்னீர்செல்வம் என்ன பேசினார் தெரியுமா?
மதுரை: துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை மதுரை முப்பெரும் விழாவுக்கு முதல்வர் எடப்பாடி தரப்பு அழைக்கவில்லை என அதிமுக எம்.பி. மைத்ரேயன் உள்ளிட்டோர் பகிரங்கமாகவே அதிருப்தி வெளிப்படுத்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமியுடன், மற்றொரு நிகழ்ச்சியில் பன்னீர் செல்வம் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டார்.
ராமநாதபுரம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து பங்கேற்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
பன்னீர்செல்வம் உரையில் கூறியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றியும், பாராட்டுகளும் உண்டு. நியாயமான போரில் உண்மை வென்றிட நம்முடன் நின்ற தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ராமநாதபுரம் பெருமை
தேசியம் மற்றும் தெய்வீகத்தை தனது இரு கண்களாக கொண்டு, ஜாதி, மத பேதமற்று, அனைத்து மக்களையும் சரிசமமாக நேசித்த பசும்பொன் தேவர் பிறந்த மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம், குடியரசு தலைவராக இருந்த அப்துல்கலாமை இந்தியாவுக்கு அர்ப்பணித்த மாவட்டம்தான் ராமநாதபுரம் மாவட்டம்.
எம்ஜிஆர் புகழ்
பன்னோக்கு சிந்தனை கொண்டவர் எம்ஜிஆர். பாடல்கள் மூலம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் எம்ஜிஆர். சிரித்து வாழ்ந்திட வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்று பாடம் புகட்டியவர் எம்ஜிஆர்.
தொண்டர்களுக்கு பெருமை
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் உன்னை சேரும் என தொண்டர்களை பெருமைப்படுத்தியவர். எம்ஜிஆர் வள்ளல் என்று பார்த்தால் கலியுக கர்ணன்.
ஜெயலலிதா வழியில் பழனிச்சாமி
ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் பழனிசாமி, திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் அதிமுகவின் உண்மை தொண்டர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டதால் தான் சின்னம் நமக்கு கிடைத்தது. இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமியை பன்னீர்செல்வம் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.