இனியாவது ‘தைரியமாக’ வண்டியை ‘ஸ்டார்ட்’ செய்வாரா ரஜினிகாந்த்?
சென்னை: கர்நாடகா தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் இனியாவது 'தைரியமாக' தனிக் கட்சியை ரஜினிகாந்த் அறிவிப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு முதல்வராகி எம்ஜிஆரை போல ஆட்சி தருவேன் என பேசியவர் ரஜினிகாந்த். ஆனால் இன்னமும் கட்சியின் பெயரைத்தான் அறிவிக்காமல் இழுத்தடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
கடந்த டிசம்பர் மாதம் முதல் ரஜினிகாந்த் கட்சியை இப்போது அறிவிப்பார்.. அப்போது அறிவிப்பார் என கூறப்பட்டு வருகிறது. ரஜினிகாந்தும் எப்போதுதான் கட்சியை தொடங்குவேன் என அறிவிக்கவும் இல்லை.
ரஜினிகாந்தைப் பொறுத்தவரை ஆன்மீக அரசியலைத்தான் முன்னெடுப்பேன் என திட்டவட்டமாக கூறியிருக்கிறார். பாஜகவால் தமிழகத்தில் நேரடியாக கால் பதிக்க முடியாது என்பதால் ரஜினியை அக்கட்சி களமிறக்குகிறது என கூறப்பட்டு வருகிறது.
கர்நாடகா தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளின் பார்வையும் தமிழகம் பக்கம் திரும்பும். அதுவும் கர்நாடகாவில் பாஜக கை ஓங்கிய நிலையில் எந்தெந்த கட்சிகளை தலைவர்களை தமிழகத்தில் வளைக்குமோ என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாஜக வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இந்த தைரியத்திலாவது ரஜினி கட்சி தொடங்கிவிடமாட்டாரா? என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. ரஜினி கட்சி தொடங்கினால் பல கட்சி பிரமுகர்கள் அதில் இணைவார்கள் என ஆரூடம் கூறப்பட்டு வருகிறது.
தமிழக அரசியல் களம் ஒருவித தேக்கத்தை எதிர்கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் கட்சி தொடங்கி இந்த அரசியல் களத்தை பரபரப்பாக்குவாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.