'நீட்' தேர்வு குறித்து தமிழக அரசு எப்போது திருவாய் திறக்கும்? மாணவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் குறித்து முதலமைச்சரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் பேசாமல் உள்ளனர். மே மாதம் 7ஆம் தேதி தேர்வு வரவுள்ள நிலையில் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
சென்னை: 'நீட்' தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுமா? அல்லது அனைவரும் அந்த தேர்வை எழுத வேண்டுமா என மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து, தமிழக அரசு இதுவரை தெளிவுபடுத்தவில்லை.
மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் பள்ளி மற்றும் உயர்கல்வித் துறையில் பல குளறுபடியான மாற்றங்களைக் கொண்டு வந்தது. அதில் ஒன்றுதான் நாடு முழுவதுக்குமான ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வான 'நீட்' எனப்படும் தேர்வு முறை.
ஜெயலலிதாவின் 'நீட்'டான முடிவு
இந்த தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்பட்ட உடனே தமிழகத்தில் இருக்கும் கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையடுத்து, இதன் சாதக-பாதகங்களை அலசி ஆராய்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீட் தேர்வில், தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஜனதிபதியிடம்....
இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம், தமிழக சட்டசபையில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை, அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். தற்போது அந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவில்லை.
அரசு கவலைகொள்ளாதா?
ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிரகு அதிமுகவில் ஏற்பட்ட குளறுபடியால் அதுகுறித்து பேசுவதற்கு யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது. பிப்ரவரி 27ஆம் தேதி, பிரதமரை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 'நீட்' குறித்து என்ன பேசினார் என்பது குறித்து இதுவரை விளக்கமாக எதுவும் கூறவில்லை.
மறுக்கும் அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சராக பொறுப்பெற்றுள்ள அமைச்சர் செங்கோட்டையனுக்கும் 'நீட்' குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை. செய்தியாளர்கள் 'நீட்' தேர்வு குறித்து கேள்வி கேட்டால் 'மாணவர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள்' என்று சொல்லி, மழுப்பி அந்தக் கேள்வியைத் தவிர்த்து ஓடிவிடுகிறார்.
முதல்வரும் விளக்கம் அளிப்பதில்லை; கல்வி அமைச்சரும் விளக்கம் அளிப்பதில்லை என்னும் போது இதுகுறித்து விரிவான விளக்கத்தை யார் தருவார்கள் என மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
மத்திய அமைச்சர் வருகை
இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், முதல்வர் எடப்பாடியாரை சந்தித்தார். அப்போது, 'நீட் தேர்வு குறித்து பரிசீலிக்கப்படும்' என்று கூறிச் சென்றிருக்கிறார்.
மாணவர்களின் நிலை?
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தெளிவும் வேகமான செயல்பாடும் இல்லாத ஆட்சி நீட் தேர்வு குறித்து, தெளிவான முடிவைத் தெரிவிக்கும்? இதுவரை தமிழக அர்சை நம்பி விண்ணபிக்காத மாணவர்களின் நிலை என்ன ஆகும்? என்பது விடை தெரியாத வினாவாக இருக்கிறது.