அதான் "அம்மா" விடுதலையாயிட்டாங்களே.. "மெஸ்"ஸை எப்ப சார் திறப்பீங்க... ஏங்கும் மக்கள்!
கரூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையான பின்னர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட அம்மா உணவகங்கள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் குறிப்பாக தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தமிழகத்திலேயே டெக்ஸ்டைல், பஸ்பாடி, கொசுவலை, விவசாயம் உள்ளிட்டவைகளில் கொடி கட்டி பறப்பது தமிழக அளவில் கரூர்தான். அப்படிப்பட்ட கரூரில் மினிமம் சாப்பாடு ரூ 20 லிருந்து ரூ 195 வரை (சைவ சாப்பாடு) செலவாகிறது. இது ஒரு வேளைக்கு மட்டும் தான். இதே போல தமிழகத்திலும் ஆங்காங்கே இதே நிலைமை தான்.
கரூரில்
இப்படி இருக்க கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில், அம்மா உணவகங்களை அமைக்க உத்தரவு பிறப்பித்து, பல பகுதிகளில் திறந்தும் பொதுமக்கள் பயன்பட்டு வருகின்றனர். அதேபோல கரூர் மாவட்டத்திலும் அம்மா உணவகங்களை அமைக்க கடந்தாண்டு தமிழக அரசு முடிவு செய்து அறிவித்தது.
2 இடத்தில்
கரூரை பொறுத்தளவில் கரூர் உழவர்சந்தை அருகிலும், கரூர் அரசு மருத்துவமனை வளாகத்திலும் உணவகம் கட்டிடம் கட்டும் வேலை தொடங்கியது. கட்டிடப்பணிக்காக தலா ரூ.25லட்சம் செலவிடப்பட்டது. சமையலறை உணவகம் பொருட்கள் வாங்குவதற்காக தலா ரூ.9லட்சமும் நகராட்சி நிதி ஒதுக்கீடு செய்தது.
நகராட்சி நிதியில்
அரசு உத்தரவின்படி 2 உணவகங்களையும் அமைக்கும் பணிக்கான நிதியை கரூர் நகராட்சி அளித்தது. இந்த நிதியை அடுத்து வரும் அரசு திட்டத்தில் இருந்த செலவின தொகையை ஈடுசெய்ய நிர்வாகம் தீர்மானித்தது. இதையடுத்து நகராட்சி நிதியில் கட்டுமான வேலைகள் நடைபெற்றன.
கூடுதல் சாமான் தேவையாம்
மொத்தம் இதற்காக ரூ.68 லட்சம் ஒதுக்கீடு செய்து செலவிடப்பட்டுள்ளது. இரு இடத்திலும் கட்டிட பணிகள் முடிந்துள்ளன. சமையல் உபகரணங்கள் கூடுதலாக தேவைப்படுவதால் உணவகம் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. மேலும் இரு உணவகத்திற்கும் கூடுதல் செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கூடுதலாக ரூ. 6 லட்சம்
அரசு மருத்துவமனை, உழவர்சந்தை அருகே கட்டப்படும் அம்மா உணவகத்தின் சமையல் கூடத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கூடுதலாக தேவைப்படுகிறது. உணவகத்தை நடத்த உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர் இதற்காக கூடுதலாக ரூ.3 லட்சம் நிதிகேட்டுள்ளனர். இரு இடத்திற்கும் தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.6 லட்சம் நிதியை கரூர் நகராட்சி அளித்துள்ளது.
எப்போது வரும்
இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், இரு இடத்திலும் அம்மா உணவகம் அமைக்க சமையல் உபகரணங்களுக்காக ஏற்கனவே தலா ரூ.9 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இப்போது கூடுதலாக கேட்ட நிதியும் அளிக்கப்பட்டுள்ளது. உபகரணங்கள் முழுமையாக வாங்கப்பட்ட பின்னர் உணவகம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றனர்.
அக்னி சட்டியெல்லாம் தூக்குனீங்களே
"அம்மா" பிறந்தநாளிற்காக அக்னி சட்டியெல்லாம் தூக்கும் அமைச்சர், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் இந்த அம்மா உணவகத்தில் மட்டும் பாகுபாடு பார்ப்பது ஏன் என தெரியவில்லை என அ.தி.மு.க வினரும் புலம்புகின்றனர். கரூர் மாவட்டத்தில் இருக்கும் விலை உயர்ந்த ஒட்டல்கள் இந்த அம்மா உணவகம் திறக்கப்பட்டால் தங்களது வருமானம் போய்விடும் என்பதால் பிரஷர் கொடுத்து உணவகத் திறப்பை தாமதப்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
திறந்தா போதும்
எது எப்படியோ அம்மா உணவகம் திறந்து பொதுமக்களுக்கு தரமான உணவு கிடைத்தால் போதும் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள். அம்மா உணவகத்தில் அமைச்சர் கூடுதல் கவனம் எடுப்பாரா என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. அம்மா விடுதலை வரை பொறுத்திருந்தது போதும் அதுதான் அம்மாதான் விடுதலை ஆகிவிட்டாரே, அம்மா உணவகத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுங்கள் என சமூக நல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.