என்று வீடு திரும்புவார் ஜெயலலிதா?... ஏக்கத்துடன் காத்திருக்கும் "பிரச்சினைகள்"! #jayalalithaa
சென்னை: குடும்பத் தலைவர் இல்லாவிட்டால் எப்படி குடும்பத்தில் ஒரு தடுமாற்றம் வருமோ அது போலத்தான் தற்போது தமிழகமும், அதிமுகவும் காட்சி அளிக்கிறது. முதல்வர் ஜெயலலிதா உடல் நலமின்மையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரச்சினைகள் அவரது வருகைக்காக காத்துக் கிடக்கின்றன.
காவிரிப் பிரச்சினை முதல் அதிமுகவில் பல பிரச்சினைகளும் சேர்ந்து காத்துள்ளன. உள்ளாட்சித் தேர்தல் பணிகள், பிரச்சாரம் ஆகியவையும் உள்ளன. இப்படி தலைக்கு மேல் பல பிரச்சினைகள் உள்ள நிலையில் முதல்வருக்கு உடல் நலக்குறைவு என்பது அதிமுகவுக்கும், தமிழகத்திற்கும் பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.
தமிழக அளவில் மிக முக்கியப் பிரச்சினை இப்போதைக்கு காவிரிதான். இருப்பினும் முதல்வர் இருந்த இடத்திலிருந்தே தனது சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார். தமிழக அரசு இதில் செயல்படும் விதம் சரியாகவே இருப்பதாகவே பலரும் சொல்கிறார்கள்.
ஜெயலலிதா போவது போல வருமா
அதேசமயம், இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்வதற்கும், எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வதற்கும் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஜெயலலிதா போனால் நடப்பதே வேறு
முதல்வர் சொல்லிக் கொடுப்பதை போய் சொல்லி விட்டு வருவதற்காக டெல்லி செல்லவுள்ளார் எடப்பாடி. கூடுதலாக அவர் எதையும் பேசப் போவது இல்லை. ஆனால் ஜெயலலிதா இக்கூட்டத்திற்குப் போனால் நடப்பதே வேறு என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
போனாலே அதிரடிதான்
ஜெயலலிதா நலமடைந்து இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்ற செய்தியே முதலில் கர்நாடகத்திற்கு இடியாக இருக்கும். ஜெயலலிதா போனால் அவர் பேசினால் நிச்சயம் உமா பாரதியால் சமாளிக்க முடியாது என்பதே உண்மை. அந்த வகையில் ஜெயலலிதா போகாமல் பழனிச்சாமி போவது தமிழகத்திற்குப் பெரும் பின்னடைவுதான்.
அதிமுக பிரச்சினைகள்
அடுத்து அதிமுகவில் பல பிரச்சினைகள். உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு பெரும் குழப்பத்தையும் குளறுபடிகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினர் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
தமிழகமெங்கும் போராட்டங்கள்
தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பெரும் போராட்டங்களில் குதித்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு உடல் நலம் சரியில்லை என்ற போதிலும் கூட அவர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள் என்றால் எந்த அளவுக்கு வேட்பாளர் தேர்வில் விளையாடியிருக்கிறார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. இதைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ஜெயலலிதா.
தேர்தல் பிரசாரம்
அடுத்து உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம். இதற்கு நிச்சயம் ஜெயலலிதா நேரில் போவதற்கான வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அப்படியே போனாலும் கூட சென்னை கோவை என செலக்ட்டிவாக சில இடங்களுக்கு மட்டுமே அவர் போக வாய்ப்புண்டு. அதுவும் கூட உறுதி இல்லை என்கிறார்கள்.
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு
இதையெல்லாம் விட முக்கியமாக சொத்துக் குவிப்பு அப்பீல் வழக்கின் தீர்ப்பு விரைவில் வரவுள்ளது. இதுதான் ஜெயலலிதாவை பெரும் டென்ஷனுக்குள்ளாக்கியுள்ளது. அதிமுகவினரும் இந்தத் தீர்ப்பை எதிர் நோக்கித்தான் கவலையுடன் காத்திருக்கின்றனர்.
மக்கள் எதிர்பார்ப்பு
இப்படி ஜெயலலிதாவுக்கும் அதிமுகவுக்கும் பல பிரச்சினைகள் தலைக்கு மேல் உள்ள நிலையில் தமிழக மக்களின் முக்கிய எதிர்பார்ப்பு கவலை என்னவென்றால் காவிரிப் பிரச்சினையில் உச்சகட்ட அட்டகாசத்தில் கர்நாடகம் இறங்கியுள்ள நிலையில் தமிழக அரசின் தலைமை தடுமாற்றத்துக்குள்ளாக்கி விடக் கூடாதே என்பது மட்டும்தான். அதிலும் ஜெயலலிதா உறுதியாக போய்க் கொண்டுள்ள நிலையில் விரைவில் அவர் குணமடைந்து தமிழக விவசாயிகளுக்கு ஆறுதல், நம்பிக்கை தரும் வகையில் மீண்டும் முழு வீச்சில் செயல்பட வேண்டும் எண்பது மட்டும்தான்.