காங். தலைவராகி விட்டார் ராகுல்.. ஸ்டாலின் திமுக தலைவராவது எப்போது?.. வம்பிழுக்கும் எச்.ராஜா
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி ஆகிவிட்டார், திமுக தலைவராக ஸ்டாலின் ஆவது எப்போது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி ஆகிவிட்டார், ஆனால் செயல்தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக ஆவது எப்போது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி கேட்டு வம்பிழுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக உள்ள ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அவரால் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படும் என்று வெளிப்படையாக சிலர் கூறிவந்தனர்.
இந்நிலையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட சோனியா காந்தி விரைவில் அனைவரது விருப்பங்களும் நிறைவேறும் என்று சூசகமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக பொதுக் குழு கூட்டம் கடந்த சில நாள்களுக்கு முன் கூடியது.
இதையடுத்து முறைப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத் தேர்தலில் ராகுல் காந்தி மனுத் தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக 89 பேர் மனுத்தாக்கல் செய்தனர். ராகுலைத் தவிர வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யாததால் அவர் ஒருமனதாக தலைவரானார்.
இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், எப்படியோ ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் ஆகிவிட்டார். நண்பர் ஸ்டாலின் தி.மு.க தலைவர் ஆவது எப்போது என்றுதான் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.