நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்?
டெல்லி: தமிழகத்தில் உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
நாங்குநேரி சட்டசபை உறுப்பினராக இருந்த எச் வசந்தகுமார், கன்னியாகுமரி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்பியானார். இதையடுத்து அவர் கடந்த மே 27-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் எம்எல்ஏ ராதாமணி உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் மாதம 14-ஆம் தேதி காலமானார். இதையடுத்து இந்த தொகுதியும் காலியானது.
இதையடுத்து இந்த இரு தொகுதிகளுக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலுடன் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு நாளை நடைபெறுகிறது.
வேலூர் பக்கமே செல்லவில்லையே.. கனிமொழி ஏன் பிரச்சாரம் செய்யவில்லை.. கதிர் ஆனந்த் அளித்த பதில்!
வேலூர் தேர்தல் முடிந்ததும் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளை பட்டியல் எடுத்து அந்தந்த மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) கடைசியில் தேர்தல் நடத்தலாமா? என்று ஆலோசித்துள்ளனர். தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவ மழை காலம் என்பதால் அதற்கு முன்கூட்டியே இடைத்தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.