தமிழகம் முழுவதும்.. வார்டுக்கு 4 "யுவராஜ்"கள் இருக்கிறார்கள்.. கட்சிகள் களையெடுப்பது எப்போது??
சென்னை: இன்று வெளிச்சத்திற்கு வந்தது ஒரு யுவராஜ்தான். ஆனால் எல்லாக் கட்சிகளுக்கும் ஒவ்வொரு வார்டுக்கும் நாலு குண்டர்கள் நிர்வாகிகள் என்ற போர்வையில் ரவுடித்தனம் செய்து கொண்டுதான் உள்ளனர். மக்கள் இவர்களைப் பார்த்து தொடர்ந்து அஞ்சும் நிலைதான் உள்ளது.
ரவுடிகளும், குண்டர்களும் இல்லாத கட்சிகளைப் பார்க்கவே முடியாது. அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, ஆண்ட கட்சியாக இருந்தாலும் அல்லது குட்டிக் கட்சிகளாக இருந்தாலும் சரி. ரவுடித்தனம் செய்யவே ஒவ்வொரு வார்டிலும் ஒருவர் இருப்பார்.
ப்ளூ அல்லது பிளாக் கலர் ஜீன்ஸ், நீட்டாக வெள்ளைச் சட்டை. மத சார்பான கட்சி என்றால் நெற்றியில் விபூதி அல்லது குங்குமம். இதுதான் இந்த மாடர்ன் குண்டர்களின் அடையாளம். இப்படிப்பட்டவர்களை மக்கள் தினசரி சந்தித்துக் கொண்டுதான் உள்ளனர்.
ரவுடித்தனம்
இந்த ரவுடிக் கும்பலின் அடையாளம் அரசியல்வாதிகள். வார்டு பிரதிநிதி, வார்டு செயலாளர் என ஏதாவது ஒரு பதவி ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால் இவர்கள் பெரும்பாலும் செய்வது கட்டப் பஞ்சாயத்துதான். அதுதவிர கட்சி மேலிடத்தை காக்கா பிடிப்பது, அவர்களுக்குத் தேவையானதை செய்து தருவது, கூட்டம் நடந்தால் அதற்கான செலவுக்குப் பணம் திரட்டித் தருவது இப்படி சில்லறை வேலைகளைச் செய்வது இவர்களது வழக்கம்.
மக்கள் பயப்பட வேண்டும்
இவர்களைப் பார்த்து மக்கள் பயப்பட வேண்டும். எதிர்த்துப் பேச முடியாது. எதிர்த்துப் பேசுவோருக்கு என்ன நடக்கும்.. விருகம்பாக்கம் பிரியாணிக் கடையில் என்ன நடந்ததோ அதுதான் நடக்கும். இது எல்லாக் கட்சிகளிலும் நீக்கமற நடக்கும் அட்டகாசம். யாரும் விதி விலக்கு அல்ல.
கடைக்காரர்கள் பரிதாபம்
இந்த ரவுடிக் கும்பலின் மிக எளிதான இலக்கு கடைக்காரர்கள்தான். டீக்கடை, மளிகைக் கடை, ஹோட்டல்கள், பெரிய பெரிய வணிக கடைகள் என எலலாவற்றிலுமே இவர்களின் கை நீண்டிருக்கும். குறிப்பாக சாதாரண மளிகைகக் கடைக்காரர்கள் படும் பாடு இருக்கே.. அப்பப்பா.
அண்ணாச்சிகள்னா அடி
மளிகைக் கடைக்காரர்களை இவர்கள் மனிதர்களாகவே மதிப்பதில்லை. அண்ணாச்சி அண்ணாச்சி என்று எல்லோரும் அன்போடு அழைத்தால் இவர்கள் மட்டும் பொழைக்க வந்த ஊர்நாட்டுக்காரன் என்றுதான் அசிங்கமாக பேசுவார்கள். அவர்கள் கேட்டத்கை கொடுக்காவிட்டால் திட்டுவார்கள், மீறிப் பேசினால் அடிக்கவும் செய்வார்கள். கடையையும் காலி செய்ய வைத்து விடுவார்கள். அந்த அளவுக்கு இந்த அரசியல் ரவுடிகளின் கொட்டம் அதிகம்.
தலைவர்கள் சரியில்லை
இதுபோன்ற ரவுடிகளை கட்சியை விட்டுத் தூக்கி எறிவது குறித்து தலைமைகள் எப்போதுமே யோசிப்பதே இல்லை. காரணம், இதுபோன்ற வன்முறை, அடியாள் கும்பல்களால்தான் கட்சிகளின் இதயமே இயங்குகிறது. இவர்களை வைத்துத்தான் ஒவ்வொரு கட்சியும் ஏரியா வாரியாக பிழைக்க முடியும். அதனால்தான் இவர்களை வளர்த்து விடுகிறார்களே தவிர வெட்டி விடுவதில்லை.
மக்கள் படும் பாடு
இன்று நமக்குத் தெரிந்தது ஒரே ஒரு யுவராஜ்தான். இது அண்டசராசரசத்தில் பூமி எந்த அளவுக்கு ஒரு குட்டிப் புள்ளியோ அது போலத்தான். ஒவ்வொரு வார்டிலும் வசிக்கும் மக்களுக்கு இந்த செய்தியில் எத்தனை உண்மை உள்ளது என்பது புரியும். அந்த அளவுக்கு மக்களும், வியாபாரிகளும், பல்துறையினரும் இந்த அரசியல் ரவுடிக் கும்பல்களால் தினசரி அவஸ்தைப்பட்டுக் கொண்டுதான் உள்ளனர்.
ஆனால் விடிவுதான் எப்போது என்று தெரியவில்லை.