நடிகர் சங்க போராட்டம்: நடிகர்கள் பிரகாஷ்ராஜ், அர்ஜுன், பிரபுதேவா ஆகியோர் எங்கே? #justasking
நடிகர் சங்கம் போராட்டத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், அர்ஜுன், பிரபுதேவா உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் கன்னடத்து தமிழ் நடிகர்களான பிரகாஷ்ராஜ், அர்ஜுன் , அதர்வா முரளி, பிரபுதேவா உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதில் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சிவகுமார்,கார்த்தி, சத்யராஜ், பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் இதில் கன்னடத்து நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.
நடிகர்கள் மிஸ்ஸிங்
இந்த போராட்டத்தில் தமிழ் சினிமாவால் பிரபலமடைந்த கர்நடாகத்தைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ், அர்ஜூன், அதர்வா, பிரபுதேவா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபகாலமாக மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.
கன்னடர்கள்
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்தில் வந்த நடிகர்கள் பிரபலமடைந்துள்ளனர். அர்ஜுன் போன்றோரை தூக்கி வைத்து கொண்டாடியுள்ளனர். பிரபுதேவாவை கேட்கவே வேண்டாம். டான்ஸ் என்றால் பிரபுதேவா என்ற அளவுக்கு மக்கள் மனதில் உள்ளனர்.
ஜஸ்ட் ஆஸ்கிங்
நடிகர் பிரகாஷ் ராஜ் கர்நாடகாவில் நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலுக்காக பாஜக எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் பிழைப்பு நடத்தும் இவர் போன்றோர் அரைநாள் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள பிரசாரத்தை ஒரு நாள் ஒத்தி வைத்திருந்தால் குடியா முழுகியிருக்கும். மத்திய அரசை ஜஸ்ட் ஆஸ்கிங் என்ற ஹேஷ்டேக் கொண்டு கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்பார்.
தங்களுக்கு அல்ல
கர்நாடகத்துக்கும் கோவாவுக்கும் இடையே நடந்த தண்ணீர் பிரச்சினையின்போது பிரகாஷ் ராஜ், கர்நாடகத்தில் ஓடும் ஒரு நதி கன்னடர்களுக்கு சொந்தம் என்றார். அதுபோல் தமிழகத்திலும் ஓடும் காவிரிக்காக போராட்டம் நடத்திய நடிகர் சங்க போராட்டத்தில் அவர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளாதது ஏன்.
நடிகர் சங்க தேர்தல்
நடிகர் சங்க தேர்தல் என்றால் பிரகாஷ் ராஜ், அதர்வா, அர்ஜுன், பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட நடிகர்கள் ஓடி வருகின்றனர். ஆனால் இதுபோன்ற மக்கள் பிரச்சினை என்றால் தங்கள் மாநிலத்துக்கு எதிராக நடந்து கொள்ளக் கூடாது என்று ஜகா வாங்குகின்றனர். எங்கோ கிடந்த இவர்களை இன்று தமிழகமே பேசும் அளவுக்கு உயர்த்திய தமிழக மக்களுக்கு இவர்கள் செய்யும் நன்றிக் கடன் இதுதானா.