400 கிலோ தங்கம், 20 கோடி வைரப் பெட்டகம் எங்கே?... சென்னை சில்க்ஸ் இடிபாட்டில் புதைந்ததா??
சென்னை சில்க்ஸ் கட்டிட தீ விபத்தில் சிக்கியுள்ள 400 கிலோ தங்க நகை மற்றும் ரூ.20 கோடி நகைப் பெட்டகத்தின் நிலை என்ன என்பது தெரியாததால் கடை உரிமையாளர்கள் தொடர்ந்து பதற்றத்தில் உள்ளனர்.
சென்னை: சென்னையில் தீ விபத்தில் சிக்கி இடிக்கப்பட்டு வரும் தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தரை தளத்தில் வைக்கப்பட்டிருந்த நகைப் பெட்டகத்தின் நிலை என்ன என்று இதுவரை தெரியவில்லை.
தமிழகம் கண்டிராத மிகப்பெரிய வணிக வளாக தீ விபத்து என்று வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது சென்னை தியாகராய நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டிட தீ விபத்து. கடந்த 31ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் பிடித்த தீ, 36 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நேற்று தான் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ப வடிவில் சதுரப்பெட்டி போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த 8 மாடி கட்டிடத்தில் தீயணைப்புக்கான வசதிகள் இல்லாததே வெகு நேரம் தீயை அணைக்க முடியாமல் போனதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து கட்டடம் வெப்பத்தில் இருப்பதால் விரிசல் ஏற்பட்டு முன்பக்க சுவர், கண்ணாடி வெடித்து சிதறுவது என்று அந்தக் கட்டிடம் அபாயமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழ் தள பாதுகாப்பு அறை
தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் கீழ் தளத்திலேயே நகைக்கடையும் இயங்கி வந்தது. அன்றாடம் இந்த நகைக் கடையில் இருக்கும் நகைகள் அனைத்தும் பாதுகாப்பு பெட்டியில் எடுத்து வைக்கப்படும். இந்த பாதுகாப்பு பகுதியும் கடையினுள்ளேயே இருப்பதாக தெரிகிறது.
வெப்பம் தாங்குமா?
தொடர்ந்து விட்டு விட்டு எரியும் தீ, கட்டிட இடிபாடுகள் என்று கட்டிடத்தினுள் செல்ல முடியாத நிலை இருப்பதால் அந்த நகைப் பெட்டகத்தின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. தோராயமாக நகைக்கடையில் 400 கிலோ தங்கம், 2 ஆயிரம் கிலோ வெள்ளி, ரூ.20 கோடி மதிப்புள்ள வைர நகைகள் வைக்கப்பட்டுள்ளதாக கடை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
150 டிகிரி சூட்டில் என்னவாகியிருக்கும்
பாதுகாப்பு பெட்டகத்தில் இவை வைக்கப்பட்டிருந்தாலும் விடாமல் பற்றி எரிந்த தீயால் கட்டிடத்திற்குள் 150 டிகிரி வரை வெப்பம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த வெப்பத்தில் நகைகள் தன்னுடைய தன்மையை இழந்திருக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
என்ன ஆச்சு?
இயற்கைப் பேரிடர்களை தாங்கும் அம்சங்கள் பொதிந்தது தான் பாதுகாப்பு பெட்டகம் என்றாலும், வெப்பம், கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் நகைப்பெட்டகத்தின் நிலை என்ன என்பது உரிமையாளர்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. முழுவதுமாக கட்டிடம் இடிக்கப்பட்டு, இடிபொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டால் மட்டுமே இது குறித்த முழு விவரம் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது.