ஜெ., சசி சொத்துக்கள் பறிமுதல்.. எந்தெந்த மாவட்ட சொத்துக்கள் பறிபோகின்றன?
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் சொத்துகள் பறிமுதல் செய்ய எந்த 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் சொத்துகள் பறிமுதல் செய்ய எந்த 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 1991-96-ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. அதேபோல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைதண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதத் தொகையை வசூலிக்க அவர்கள் 4 பேரது சொத்துகளை முடக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள 68 சொத்துகளை பறிமுதல் செய்ய தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது.
அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.