சுவாதியைக் கொல்ல பயன்படுத்திய அரிவாள் யாருடையது?.. புதுக் குழப்பம்!
சென்னை: சுவாதியைக் கொல்லப் பயன்படுத்தியதாக கூறப்படும் அரிவாள் குறித்த குழப்பம் மேலும் கூடியுள்ளது. இதுதொடர்பாக இதுவரை 3 விதமான தகவல்கள் பரவியுள்ளன.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து இளம் பெண் சுவாதியைக் கொலை செய்ததாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் போலீஸார் தன்னைக் கைது செய்ய முயன்றபோது பிளேடால் தனது தொண்டையைக் கிழித்துக் கொண்டதாக கூறி காயமடைந்துள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் போலீஸாரிடம் வாக்குமூலம் அறித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இன்னும் அவர் முழுமையாக வாக்குமூலம் அளிக்கவில்லை.
இந்த நிலையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் குறித்த புதுப் புதுத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது அந்த அரிவாள், ராம்குமாரின் உறவினருக்குச் சொந்தமானது என்று ஒரு தகவல் வெளியாகியுள்ள.
கர்நாடக அரிவாள்
கொலை நடந்த சில மணி நேரங்களில் இந்த அரிவாளை போலீஸார் கைப்பற்றியதாக கூறப்பட்டது. அப்போது போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இந்த அரிவாள் கர்நாடக மாநிலத்தில் கூர்க் மாவட்டத்தில் பயன்படுத்துவதைப் போன்ற அரிவாள் என்று தகவல்கள் வெளியாகின.
மைசூர் - பெங்களூரு விரைந்த போலீஸ்
இதையடுத்து மைசூர், பெங்களூரு நகரங்களுக்குப் போலீஸ் படை விரைந்தது. சுவாதியும் சில காலம் பெங்களூரில் பணியாற்றியிருந்தார் என்பதால் இந்த வாதம் வலுப்பட்டது.
அவரே போய் வாங்கியதாக 2வது தகவல்
இந்த நிலையில் ராம்குமார் கைது செய்யப்பட்ட பின்னர் இன்னொரு தகவல் வெளியானது. அதாவது சுவாதியைக் கொலை செய்ய முடிவு செய்த ராம்குமார் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து ஆடு தழை பறிக்க அரிவாள் தேவை என்று கூறி இந்த அரிவாளை வாங்கி வந்ததாக அவரது பெற்றோர் கூறியதாக போலீஸ் தரப்பில் சிலர் கூறியிருந்தனர்.
உறவினர் அரிவாளாம்
ஆனால் தற்போது இன்னொரு தகவல் வந்துள்ளது. அதாவது இந்த அரிவாள் ராம்குமார் உறவினர் ஒருவருடையதாம். அவரி்டமிருந்து ராம்குமார் இந்த அரிவாளை எடுத்து வைத்திருந்தாராம். இப்படிப் போகிறது அந்தத் தகவல்.
மீனாட்சிபுரத்தில் தீவிர விசாரணை
இந்த நிலையில் ராம்குமாரின் சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராம்குமாரின் குடும்பத்தினர் தவிர உறவினர்கள், கிராமத்தினரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.