ஒரு ஜட்ஜு காணாமப் போய்ட்டாரு.. இன்னும் கண்டுபிடிக்கிறாங்க!
சென்னை: மல்லையா காணாமல் போனாலும் பிடிக்க முடியவில்லை. ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி காணாமல் போனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நம்ம நாட்டு போலீஸ் மற்றும் சிபிஐக்கு விடப்பட்டுள்ள மிகப் பெரிய சவால்களாக இது மாறியுள்ளது.
மல்லையாக ஏகப்பட்ட ஆயிரம் கோடிகளை விழுங்கி ஏப்பம் விட்டு விட்டு சைஸாக நாட்டை விட்டே நைஸாக எஸ்கேப் ஆகி விட்டார். அவரை சிபிஐயாலும் பிடிக்க முடியவில்லை, அவர் ஓடிப் போகப் போவதை உளவுத்துறையாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதோ இப்போது நீதிபதி கர்ணன் காணாமல் போய் கிட்டத்தட்ட 2 வாரமாகப் போகிறது. அவரையும் பிடிக்க முடியாமல் போலீஸார் மூச்சுத் திணறிக் கொண்டுள்ளனர். செமையாக தண்ணி காட்டி வருகிறார் நீதிபதி கர்ணன்.
அடேங்கப்பா நீதிபதி
நீதிபதி கர்ணன் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். அவரது அடுத்தடுத்த சலசலப்பு நடவடிக்கைகளால் கடுப்பாகிப் போன உச்சநீதிமன்றம் அவரைக் கைது செய்ய அதிரடி உத்தரவிட்டது. இதையடுத்து தலைமறைவானவர்தான் கர்ணன்.
தலைமறைவு
அவரைத் தேடி கொல்கத்தா போலீஸார் சென்னை வந்தனர். காளஹஸ்தி போனார்கள். எங்கும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கர்ணன் தாக்கல் செய்த கோரிக்கைகளை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. இதனால் அவரைக் கைது செய்தாக வேண்டிய நிலையில் கொல்கத்தா போலீஸார் உள்ளனர்.
காணவில்லையே
அவரது செல்போனை டிராக் செய்ய முயற்சித்தனர். அதிலும் ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கர்ணன் எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் குழப்பமாகியுள்ளது மேற்கு வங்க மாநில காவல்துறை. சென்னை காவல்துறையும் அவர்களுக்கு உதவி வருகிறது. அவர்களாலும் கர்ணன் குறித்த தகவல் கிடைக்கவில்லையாம்.
ஹாஸ்டலில் டேரா
கடந்த 10ம் தேதி கர்ணனைக் கைது செய்வதற்காக வந்த மேற்கு வேங்க போலீஸ் குழு தொடர்ந்து இங்கேயே தங்கியுள்ளது. பல வழிகளிலும் முயற்சித்து வரும் அவர்களுக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.
நீதிபதியே தண்ணி காட்டினால் எப்படி
தண்ணி காட்டும் குற்றவாளிகளை நீதிபதிகள் கடுமையாக கண்டிப்பதை பார்த்திருக்கிறோம். இப்போது ஒரு நீதிபதியே போலீஸாருக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார்!