என் மனைவி எங்கே.. என் குழந்தை எங்கே.. மருத்துவமனையில் கதறிய உஷாவின் கணவர்
திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளரால் உயிரிழந்த உஷாவின் கணவர் எனது குழந்தை எங்கே எனது மனைவி எங்கே என கதறியது துயரத்தில் ஆழ்த்தியது.
Recommended Video
திருச்சி: போக்குவரத்து காவல் ஆய்வாளரால் உயிரிழந்த உஷாவின் கணவர் எனது குழந்தை எங்கே எனது மனைவி எங்கே என கதறியது துயரத்தில் ஆழ்த்தியது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. 40 வயதான இவர் தனியார் வங்கியில் கலெக்ஷன் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி உஷா. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்தார்.
ராஜா தனது மனைவியுடன் நேற்று மாலை தஞ்சையில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி வந்தார். துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் ராஜாவின் மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி கூறினார்.
விரட்டிச்சென்ற இன்ஸ்பெக்டர்
ஆனால் அவர் அதனை கவனிக்காமல் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து ஓட்டிச்சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் காமராஜ் ஜீப்பை எடுத்துக்கொண்டு ராஜாவின் மோட்டார் சைக்கிளை பின்னால் விரட்டிச் சென்றார்.
எட்டி உதைத்தார்
திருச்சி-தஞ்சை சாலையில் பெல் ரவுண்டானா அருகே இன்ஸ்பெக்டர் காமராஜ் அவர்களை மறித்து நிறுத்தினார். அப்போது ஜீப்பில் இருந்து கீழே இறங்கிவந்த அவர் ராஜாவின் மோட்டார் சைக்கிளை ஆவேசமாக எட்டி உதைத்தார்.
கலைந்த கர்ப்பம்
இதனால் அவர் நிலைதடுமாறி மனைவி உஷாவுடன் சாலையில் விழுந்தார். இதில் 3 மாத கர்ப்பிணியான உஷா படுகாயம் அடைந்தார். அவருடைய கர்ப்பம் கலைந்து ரத்தம் வெளியேறி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.
பலியான உஷா
இதையடுத்து அங்கு திரண்ட மக்கள் உஷாவையும் அவரது கணவர் ராஜாவையும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறி அவர் அணிந்திருந்த மாங்கல்யம் உள்ளிட்ட ஆபரணங்களை கணவர் ராஜாவிடம் கொடுத்தனர்.
கதறிய கணவர்
அதனை பார்த்த ராஜா என் மனைவி எங்கே, என் குழந்தை எங்கே என கதறி அழுதார். மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்துவிட்டு ராஜா கதறியழுதது அங்கிருந்தவர்களை துயரத்தில் ஆழ்த்தியது.