சட்டைப் பையில் தேசிய கொடியுடன் சுற்றும் எஸ்வி சேகர் சட்டத்தை மதிக்காதது ஏன்?
நீதிமன்றத்தின் நீதியரசர் ஒருவர், எஸ்.வி.சேகர் செய்தது மிகப்பெரிய தவறு என ஆணித்தரமாக கூறிய பிறகும், அவரது உத்தரவை மதித்து, தனது தவறுக்காக போலீசில் சரணடைந்திருக்க வேண்டும் எஸ்.வி.சேகர்.
Recommended Video
சென்னை: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தவறான கருத்துக்களை பதிவிட்ட புகாரில் எஸ்.வி.சேகர் மீது காவல்துறை பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சட்டைப் பையில் தேசிய கொடியை குத்தியபடி சுற்றி வந்த எஸ்.வி.சேகர், சட்டத்தை மதித்து இதுவரை சரணடையவில்லை.
சமீபத்தில், பெண் பத்திரிக்கையாளர்கள் தொடர்பாக, நடிகர் எஸ்.வி.சேகர் தமது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் வீட்டுக்கு எதிரே பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
எஸ்.வி.சேகர் மீது பத்திரிகையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் கைது பீதி சேகரை நெருக்கியது.
தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அவருக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து 10க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ராம திலகம், எஸ்.வி.சேகர் மீது காவல்துறை பாரபட்சம் காட்டாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். பெரிய பதவிகளில் உள்ளவர்களும், அட்ஜஸ்ட் செய்துதான் முன்னேறுகிறார்கள் என்று சேகர் கூற விளைகிறாரா என்று நறுக்கென நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய கொடியுடன் சுற்றுவார்
இப்படி நீதிமன்றத்தால் கடும் குட்டு வாங்கிய எஸ்.வி.சேகர் இதுவரை வெளியே தலைகாட்டவில்லை. எஸ்.வி.சேகர் எப்போதுமே தனது சட்டைப் பையில் தேசிய கொடியை குத்தி வைத்திருப்பார். பேட்டிகளின்போதும் தவறாமல் இதை செய்வார். தேசியவாதி என்பதை காண்பிக்க இவ்வாறு அவர் செய்தார். ஆனால், இன்று அந்த தேசத்தின் ஒரு நீதிமன்றம் குட்டு வைத்த பிறகும், போலீசில் அவர் சரண் அடையவில்லை. தேசியத்தை வெறும் காட்சி பொருள் என அவர் நினைத்துவிட்டாரோ என்ற ஐயம் இதனால் ஏற்படுகிறது.
நீதியரசருக்கு மதிப்பு தர வேண்டுமே
நீதிமன்றத்தின் நீதியரசர் ஒருவர், எஸ்.வி.சேகர் செய்தது மிகப்பெரிய தவறு என ஆணித்தரமாக கூறிய பிறகும், அவரது உத்தரவை மதித்து, தனது தவறுக்காக போலீசில் சரணடைந்திருக்க வேண்டும் எஸ்.வி.சேகர். அதுதான் ஒரு தேசியவாதியின் அடிப்படை குணம். காந்தி போன்ற தேசியவாதிகள் இதைத்தான் போதித்தனர். நீதிமன்ற உத்தரவுக்கு செவி சாய்க்காமல் இருந்தால் அவர் எப்படி தேசியவாதியாக இருக்க முடியும்? தேசியக் கொடியை சட்டையில் வைத்தபடி இனியும் அவர் எப்படி பேட்டிகள் அளிக்க முடியும்?
நடவடிக்கை இல்லையே ஏன்?
எஸ்.வி.சேகர்தான் அப்படி என்றால், போராட்டம் நடத்திய ஆசிரியர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்து திறமை காட்டிய நமது காவல்துறை, எஸ்.வி.சேகரை இதுவரை கைது செய்யவில்லை. முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த பிறகும்கூட காவல்துறை இன்னும் அவரை கைது செய்யவில்லை. நீதிமன்றத்தின் மாட்சிமையை காவல்துறை செயல்படுத்த வேண்டிய இடத்தில் இருந்தும் அதை செய்ய முடியாமல் தவித்து வருகிறது. காவல்துறையின் கைகள் கண்ணுக்கு தெரியாத கைகளால் கட்டப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்து கூறுவதை பார்க்க முடிகிறது.