கார்ப்பரேசன் குழாய்ல வெறும் காத்துதாங்க வருது… அப்போ தண்ணீர் எப்போ வரும்?
சென்னை: தண்ணீர் பிரச்சினையில் தவிக்கிறது சென்னை மாநகரம். அனைத்து தேவைகளுக்கும் அத்தியாவசியமானதாக விளங்கும் தண்ணீருக்கு சென்னையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பருவமழையின் மீது பழியை போட்டு தப்பித்துக்கொள்கிறார்கள் ஆளும் கட்சியினர். கார்ப்பரேசன் குழாயில் தண்ணீர் வருவதற்குப் பதிலாக வெறும் காற்றுதான் வருகிறது என்பதால் சென்னைவாசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சில மாதங்கள் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் பேசிய போது வழக்கத்தை விட, இந்த ஆண்டு 2 சதவீதம் பருவமழை குறைவாக பதிவான காரணத்தால், 8 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறிய இதனை தடுக்க வேலூர் மாவட்டத்திற்கு 20 கோடி ரூபாயும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 10 கோடியும், காஞ்சிபுரம், திருச்சி, விருதுநகர், மதுரை தலா 5 கோடியும், பெரம்பலூருக்கு 3 கோடியும், அரியலூருக்கு 2 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
எஞ்சியுள்ள 23 மாவட்டங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஆனால் அப்போது கூட சென்னையில் தண்ணீர் பஞ்சம் வரும் என்றோ குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்றோ கூறவேயில்லை. சென்னையில் குடிநீர் பஞ்சம் வரும் என்று பாவம் அவருக்கு அப்போது எப்படித்தெரியும்.
குடிநீர் பஞ்சம்
இப்போதெல்லாம் அதிகாலையில் சென்னை நகரவாசிகளின் மிகமுக்கிய செயலே குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணீர் பிடிக்க அலைவதாகத்தான் இருக்கிறது. ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வந்த நிலை மாறி ஒருவாரம் ஆகியும் தண்ணீர் வந்தபாடில்லை.
காற்று வரும் குழாய்கள்
கார்ப்பரேசன் குழாயில் வெறும் காற்றுதான் வருகிறது. காட்சிப்பொருளாய் நிற்கும் குழாயை ஏக்கத்துடன் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டிணப்பாக்கம் மட்டுமல்லாது தண்ணீர் பிரச்சினையைப் பற்றி அறியாத சென்னை நகரின் மிகமுக்கிய பகுதிகளில் வசிக்கும் பல மக்களுக்கு இப்போதுதான் தண்ணீரின் அருமையே தெரிய ஆரம்பித்துள்ளது.
வறண்ட ஏரிகள்
தண்ணீர் விநியோகம் எப்போது சீரடையும் குடிநீர் வாரியத்திடம் இருந்து எந்த விதமான அறிவிப்புமே வரவில்லை. கடல் போல் காட்சி அளித்த பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் இப்போது பாலைவனம் போல் மாறி வருகிறது.
தண்ணீர் வரத்து இல்லை
ஆந்திரமாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வருவதும் நின்று விட்டதால், பூண்டி ஏரியின் நீர் மட்டம் வேகமாக வறண்டு விட்டது. கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைந்து விட்டதால் பூண்டி ஏரிக்கு இப்போதைக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று ஆந்திர அதிகாரிகள் கூறிவிட்டனர்.இதனால் வீராணம் ஏரியில் இருந்து தினமும் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
நிலத்தடி நீர்மட்டம்
சென்னை கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர், மடிப்பாக்கம், பழவந்தாங்கல், மேடவாக்கம், நெற்குன்றம், பாடி, பெரம்பூர், ஆழ்வார் திருநகர், மேட்டுக்குப்பம், சரசுவதி நகர், லட்சுமி நகர் உள்பட பல பகுதிகளில் கிணறுகள் வறண்டு விட்டது. போர்வெல் (ஆழ்குழாய் கிணறு) கிணற்றிலும் தண்ணீர் இல்லை. மோட்டார் போட்டால் காற்றுதான் வருகிறது.
விலைக்கு வாங்கும் மக்கள்
இந்த பகுதிகளில் 400 அடிக்கு கீழே தண்ணீர் சென்று விட்டது. 12 ஆண்டுக்கு முன்பு வறட்சி ஏற்பட்டது போல் இப்போது நிலைமை உள்ளது. இதனால் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீருக்கும், குடிநீருக்கும் லாரி தண்ணீரை எதிர்பார்த்து தான் மக்கள் உள்ளனர். நகரின் பல பகுதிகளில் குடி தண்ணீர் 1 குடம் 6 ரூபாய்க்கும், சாதா தண்ணீர் 1 குடம் 2 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சிண்டெக்ஸ் டேங்க் தண்ணீர்
குடிநீர் வாரியம் சார்பில் சென்னையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் ‘சிண்டெக்ஸ்' டேங்க் வைக்கப்பட்டு தண்ணீர் ஊற்றப்படுகிறது. அது போதுமானதாக இல்லை. டேங்கில் தண்ணீர் ஊற்றிய 1 மணி நேரத்தில் தண்ணீர் காலியாகி விடும்.
பணத்திற்கு தண்ணீர்
குடிநீர் வாரியத்தில் பேசி, தண்ணீர் லாரியை வரவழைக்க சிறிய லாரிக்கு (6 ஆயிரம் லிட்டர்) 400 ரூபாய் பணம் கட்ட வேண்டும். டிரைவருக்கு 50 ரூபாய் ‘டிப்ஸ்' கொடுக்க வேண்டும்.
டிரைவருக்கு டிப்ஸ்
9 ஆயிரம் லிட்டர் கொண்ட பெரிய லாரி தண்ணீருக்கு குடிநீர் வாரியத்தில் 600 ரூபாய் கட்ட வேண்டும். டிரைவருக்கு 100 ரூபாய் ‘டிப்ஸ்' கொடுக்க வேண்டும்.
லாரி தண்ணீரை எதிர்பார்த்து
ஓரளவு வசதி படைத்தவர்கள் பணம் கட்டி லாரி தண்ணீரை வரவழைக்கிறார்கள். நடுத்தர மக்கள் சிண்டெக்ஸ் டேங்க் தண்ணீரை எதிர் பார்த்து காத்து கிடக்கிறார்கள்.அக்டோபர் மாதம்தான் வடகிழக்கு பருவ மழை தொடங்கும். அதுவரை குடிநீருக்கு என்ன செய்வது என்று தவித்து வருகின்றனர் சென்னைவாசிகள்.
அடுத்த தேர்தலுக்கு தயாராகுங்க
குடிநீர் பிரச்சினையை கையில் எடுத்து போராடி வருகிறது எதிர்கட்சி. ஆனால் ஆளும் கட்சியோ அடுத்த தேர்தலுக்கு தயாராக ஆலோசனை நடத்த துவங்கிவிட்டது. அப்போ குடிநீர் பிரச்சினையை தீர்க்க என்ன நடவடிக்கைப் போகிறார்கள்? குடத்தை எடுத்துக்கொண்டு இன்னும் எங்கெங்கு அலையவேண்டுமோ?