சசிகலா கப்பல் ஓட்டியா சொத்து சேர்த்தார்? ஆவேச மதுசூதனன்
ஆர்கே நகர் தேர்தல் ரத்தாவதற்கு முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன், சசிகலா கப்பல் ஓட்டியா அல்லது விமானம் ஓட்டியா இந்த சொத்துக்களை சம்பாதித்தார் என கேள்வி எழுப்பினார்.
சென்னை: ஆர்கே நகரில் இடைதேர்தல் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு வழக்கம்போல பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் ஒபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன். அப்போது, போயஸ்கார்டனுக்கு வேலை வந்தவருக்கு எதற்கு கோட்டையை பிடிக்க வேண்டும் என்ற ஆசை? என ஆவேசமாகக் கேட்டார்.
நேற்று இரவில் தேர்தல் ரத்து என்று செய்தி வெளியாவது முன்பு, நம்பிக்கையுடன் அனைத்துக் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒபிஎஸ் அணி வேட்பாளர் மதுச்சூதனனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் செய்தியாளார்களிடம் பேசுகையில், போயஸ்கார்டனுக்கு ஒரு வேலைக்காரியாகத்தான் சசிகலா வந்தார். ஜெயலலிதா இறந்தவுடன், கட்சி பொது செயலாளராகி உடனே கோட்டைக்குப் போக வேண்டும் என்கிற ஆசை ஏன் வந்தது?
போயஸ்கார்டன் வருவதற்கு முன்பு அவருடைய சொத்து மதிப்பு என்ன? இன்று அவருடைய சொத்து மதிப்பென்ன? கப்பல் ஓட்டியா இத்தனை சொத்தையும் அவர் சம்பாதித்தார்? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
தினகரன் குறித்துப் பேசும் போது, ஜெயலலிதா அவருக்கு எம்.பி பதவி கொடுத்தார். ஆனால் அதை பயன்படுத்தி பல தில்லுமுல்லுகளை அவர் செய்ததால் பாராளுமன்றம் போக வேண்டாம் என்று சொல்லி அவரைக் கட்டம் கட்டி கட்சியை விட்டு வெளியேற்றினார். இப்போது இவர்கள் ஏன் பதவியில் அமர வேண்டுமென துடிக்கிறார்கள் என காட்டமாகப் பேசினார்.