"நெட்"டில் மெர்சல் படம் பார்த்த ராஜா.. விஷால் கருத்து என்னவோ?
இன்டர்நெட்டில் மெர்சல் படம் பார்த்த எச் ராஜா மீது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நடவடிக்கை எடுப்பாரா என மக்கள் கேட்கிறார்கள்.
சென்னை: இன்டர்நெட்டில் மெர்சல் படம் பார்த்த எச் ராஜா மீது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நடவடிக்கை எடுப்பாரா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மெர்சல் படம் பாஜகவினரை படு பயங்கரமாக மிரட்டியுள்ளது. இதனால் அப்படத்தில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என அக்கட்சியினர் கெடு விதித்தனர்.
இதனால் அஞ்சிய அப்படத்தின் தயாரிப்பாளடர தரப்பு படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வரும் திங்கள் செவ்வாய் கிழமைகளில் சென்சார் போர்டில் கோரிக்கை கடிதம் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இலவசமாக காட்டசொன்ன தமிழிசை
இதனிடையே மக்கள் நலனுக்கான படம் என கூறுபவர்கள் படத்தை மக்களுக்கு இலவசமாக காண்பிக்க வேண்டும் என தமிழிசை தெரிவித்திருந்தார். மெர்சல் படத்தின் லிங்கை இணையதளத்தில் ஷேர் செய்ய வேண்டும் என மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்ததாவும் தகவல் வெளியானது.
திருட்டுத்தனமாக பார்த்த எச் ராஜா
இந்நிலையில் புதிய தலைமுறையின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா மெர்சல் படத்தை இன்டர்நெட்டில் பார்த்ததாக அசால்ட்டாக கூறியுள்ளார். திருட்டு விசிடி, இணையதளம் மூலம் திருட்டு தனமாக படங்களை பார்ப்பது குற்றம்.
தயாரிப்பாளர்களுக்கு இழப்பு
இணையதளங்களில் படத்தை வெளியிடுவதாலும் திருட்டு விசிடி தயாரிப்பதாலும் தியேட்டருக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் படம் தயாரிப்பாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
ஒப்புக்கொண்ட எச் ராஜா
இதனால் இணையதளங்களில் படத்தை வெளியிடுபவர்கள் மீதும் திருட்டு விசிடி தயாரிப்பவர்களையும் களையெடுத்து வருகிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால். இந்நிலையில் பப்ளிக் ஃபிகர், அரசியல் தலைவர், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் எச் ராஜா மெர்சல் படத்தை இன்டர்நெட்டில் பார்த்ததாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
கண்டுகொள்வாரா விஷால்?
அவரது இந்த நடவடிக்கை இணையதளத்தில் திருட்டுத்தனமாக படம் பார்ப்பதை ஊக்குவிப்பதுபோல் உள்ளதாக சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மக்களை வழிநடத்தும் அரசியல்வாதிகள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தடுப்பாரா என்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.