செயற்கை சுவாசத்தில் ஜெயலலிதா.. அரசு நிர்வாகத்தை அசராமல் வழி நடத்துவது யார் தெரியுமா?
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தமிழக அரசு நிர்வாகம் யார் தலைமையில் இயங்குகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம், 22ம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு நீர்சத்து இழப்பு, ஜுரம் என்றுதான் காரணம் கூறப்பட்டது. இப்படித்தான் தனது முதல் அறிக்கையை அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டது.
காவிரி தொடர்பாக டெல்லியில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் குழுவிற்கு, ஜெயலலிதாதான், அறிவுரைகள் வழங்கி அனுப்பியதாக கூறப்பட்டது.
ஆனால், நேற்று இரவு வெளியிட்ட 4வது அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதிக ஓய்வு அவசியம்
சுவாசத்தில் கோளாறு இருந்தால் செயற்கை சுவாசம் வழங்கப்படுவது வழக்கம். இதில் பதற்றப்பட எதுவுமில்லை. சளி தொல்லை அதிகமாக இருந்தால்கூட முகத்தில் மாஸ்க் வைத்து செயற்கை சுவாசம் வழங்கத்தான் செய்வார்கள். ஆனால் இவ்வாறு சிகிச்சை பெறும்போது படுக்கையில் அதிக நேரம் ஓய்வெடுக்க வேண்டிய நிலை வரும். இதுபோன்ற சூழ்நிலையில், யார் அரசு பொறுப்புகளையும், உள்ளாட்சி தேர்தலுக்கான கட்சி பொறுப்புகளையும் கவனித்துக்கொள்கிறார்கள் என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதிகாரம் குவிந்துள்ளது
இதுகுறித்து என்டிடிவி வெளியிட்டுள்ள ஒரு செய்தி இதுதான்: மற்ற மாநிலங்களை போல தமிழகத்தில் அதிகாரம் பரவலாக்கப்படவில்லை. தமிழகத்தில் அனைத்து முக்கிய நடவடிக்கைகளையும், முதல்வர் அலுவலகமே நேரடியாக கண்காணித்து வருவதுதான் வழக்கம்.
ஆறு பேர் அணி
முதல்வர் அலுவலகத்தில் மொத்தம் 4 தனிச் செயலாளர்கள் உள்ளனர். அவர்கள்தான் மொத்தமுள்ள 54 துறைகளின் முக்கிய பணிகளையும் மேற்பார்வையிடுகிறார்கள். இந்த தனிச்செயலர்கள், மாநில தலைமைச் செயலாளருக்கும், முதல்வரின் ஆலோசகர், ஷீலா பாலகிருஷ்ணனுக்கும், ரிப்போர்ட் அளிப்பார்கள்.
அரசை வழிநடத்துகிறார்கள்
இதுகுறித்து, பெயர் தெரிவிக்க விரும்பாத அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், இந்த ஆறுபேர் அணிதான், இப்போது, அரசை வழி நடத்தி செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது என்றார். இவர்கள் அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சர்களும் வருகை
இதுதவிர ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில், சசிகலா, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பெரும்பான்மை நேரத்தை செலவிடுகிறார்கள். மேலும் சில அமைச்சர்களும் அங்கு வருகை தருகிறார்கள். இவ்வாறு என்டிடிவி கூறியுள்ளது.