கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது.. சென்னையை கலக்கும் ஒயிட் காலர் ரவுடிகள்
நகரங்களில் ஒயிட் காலர் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே சமீபத்தில் நிகழ்ந்த கூண்டோடு ரவுடிகள் கைது சம்பவம் உணர்த்துகிறது
Recommended Video
சென்னை: சென்னை உள்பட பல நகரங்களை ஒயிட் காலர் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே சமீபத்தில் நிகழ்ந்த கூண்டோடு ரவுடிகள் கைது சம்பவம் உணர்த்துகிறது.
சென்னை பூந்தமல்லி அருகே பிரபல ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கூண்டோடு கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்ட ரவுடிகளின் எண்ணிக்கை மட்டும் 200க்கும் மேல் என்று கூறப்படுகிறது.
சென்னையையே கலக்கி இந்த கைது சம்பவத்தை தொடர்ந்து தப்பியோடிய எஞ்சிய ரவுடிகளை தேடும் படலத்தை போலீசார் ஆரம்பித்துள்ளனர். தினம் தினம் இந்த தேடுதல் படலம் தொடர்பாக பல தகவல்கள் வந்துக்கொண்டு தான் இருக்கிறது.
ரவுடிகள் பிடியில் நகரங்கள்
நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் ரவுடிகளின் அட்டகாசம் எல்லைக்கு மீறிபோய் கொண்டிருப்பது தான் தற்போதைய நிதர்சனம். இன்னும் கேட்டால் ரவுடிகளின் பிடியில் தான் நகரங்களே உள்ளன என்பது தான் சரியான கருத்தாக இருக்கும். நகரத்தில் தொழில் தொடங்குவதாக இருந்தாலும், நிலம் வாங்குவதாக இருந்தாலும், வீடு வாங்குவதாக இருந்தாலும் இந்த ரவுடிகளுக்கு என்று நாம் எதாவது செய்து விட்டு தான் நமக்கு தேவையானவற்றை அடைய முடிகிறது.
கொலைநகரமாகும் சென்னை
வந்தாரை வாழவைக்கும் சென்னை இப்போது வந்தாரை மட்டும் தான் வாழவைத்துக்கொண்டிருக்கிறது என்றால் அதுவும் இந்த ரவுடிகளின் துணையுடன் தான். அரசியல் கொலைகள், பழிக்குபழி கொலைகள், ஆதாய கொலைகள், சொத்துக்கான கொலைகள் என சென்னை காற்றில் தற்போது ரத்த வாடைதான் வீசிக்கொண்டிருக்கிறது. வீச வைத்துக்கொண்டிருப்பது இந்த ரவுடிகள் தான்.
ரவுடிகள் டெம்ப்லேட்டில் மாற்றம்
சினிமா என்னும் ஊடகத்தின் போதையின் பிடியில் வாழ்ந்த நமக்கு ரவுடிகளின் தோற்றம் குறித்தும் எப்போதும் ஒரு கற்பனை இருக்கும். முரட்டு மீசை, லுங்கி, மச்சம், பரிவிதமான உடற்கட்டு நம்மை பொறுத்தவரை இவர்கள் தான் ரவுடிகள் என்று நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் இந்த தோற்றத்தை எல்லாம் ரவுடிகள் எம்ஜிஆர் காலத்திலேயே மூட்டை கட்டி வைத்து விட்டனர் என்பது தான் நிதர்சனம்
இந்தகால ரவுடிகள்
இந்த காலக்கட்டத்தில் நீங்கள் செய்திதாள்களில் ரவுடிகளின் புகைப்படத்தை பார்த்தீர்கள் என்றால் ரவுடிகள் எந்தளவு முன்னேறியுள்ளனர் என்ற உண்மை உங்களுக்கு புரிந்திருக்கும். ஆனால் பெரும்பாலும் செய்திதாள்களில் ரவுடிகளின் பாஸ்போர்ட் டைப் போட்டோக்கள் தான் அச்சிடப்படும். தூக்கம் தொலைத்த கண்கள், ஷேவ் செய்யாத தாடி இப்படி தான் இருக்கும். ஆனால் அவர்களின் முழு தோற்றத்தை பார்த்தீர்கள் என்றால் தான் புரியும். பிராண்டட் ஷர்ட், ரீபோக் ஷூ, நவீன பைக், நகைகள் என்று ரவுடிகள் பொறாமைப்படும் வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள், சிக்கவைக்கப்படும் வரை.
ஒயிட் காலர் ரவுடிகள்
இந்த சாதாரண ரவுடிகளை எல்லாம் அடக்கி ஆளும் தலைமை ரவுடிகள் தான் இந்த ஒயிட் காலர் ரவுடிகள். இவர்கள் பார்க்க ரவுடி போல இருக்க மாட்டார்கள். பணக்காரர்களுக்கும் , அப்பர் மிடில் கிளாஸுக்கு இடைப்பட்ட ஒரு தோற்றத்தை கொண்டிருக்கும் இவர்கள் தான் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பைனான்ஷியர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பாக செயல்படுகின்றனர்
தொழில்போட்டி கொலைகள்
இந்த ஒயிட் காலர் ரவுடிகளின் வேலையே தொழில்போட்டிகளை சமாளித்து கொடுப்பது தான். கிளையன்ட் யார் என்பதை பொறுத்தது அவர்களின் பணி. அதாவது அரசியல்வாதியாக இருந்தால் எதிர்க்கட்சி ஆட்கள், தொழிலதிபராக இருந்தால் அவருக்கு எதிராக தொழில் செய்பவர், இப்படி யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக மிரட்டுவது, கடத்துவது, கொலை செய்வது ஆகிய பணிகள் தான் இந்த ஒயிட் காலர் ரவுடிகளின் வேலை. இந்த வேலைகளில் இவர்கள் நேரடியாக தொடர்புக்கொள்வது கிடையாது.
இவர்கள் அப்பர்வேல்ட் டான்கள்
எந்த கொலை, ஆட் கடத்தலிலும் நேரடியாக சம்பந்தப்படாத அவர்களுக்கு என்று தனி நெட்வொர்க்கே இயங்குகிறது. இவர்கள் கீழ் இயங்கும் அடுத்த கட்ட ரவுடிகள் இவர்கள் கூறும் பணியை செய்து முடித்து கொடுப்பார்கள். இந்த ஒயிட் காலர் ரவுடிகளுக்கு என்று அனைத்து மட்டத்திலும் தொடர்பிருப்பதால் சுலபமாக எந்த பிரச்சனைகளிலும் இவர்கள் சிக்குவதில்லை. சிக்கவைக்கப்படுவதுமில்லை.
மாத சம்பளத்துக்கு ரவுடிகள்
இந்த ஒயிட் காலர் ரவுடிகள் போதிய வரை தங்களுடைய ஆளுமையை ரகசியமாகவே வைத்திருப்பார்கள். அதனை மறைக்க பல முகமூடிகளையும் அவர்கள் அணிந்துக்கொள்வதும் உண்டு. சமூக சேவகர், அரசியல் பிரமுகர், கொடையாளி, பக்திமான் என்று பல முகமூடிகள் அவர்களுக்கு உண்டு. இவர்கள் இந்த தொழிலை தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் பணம், அபரிவிதமான பணம். அவர்களிடம் பணிக்கு வரும் ரவுடிகளுக்கு வேலை இருக்கோ இல்லையோ ஆனால் மாத சம்பளம் கொடுத்து வைத்திருக்கும் அளவுக்கு அவர்களிடம் பணம் கொட்டி கிடக்கிறது.
ஒயிட் காலர்கள் பிடியில் சென்னை
சாதாரண ஒரு செல்போனில் உள்ள பேட்டரியை எப்படி கழட்டுவது என்று கூட தெரியாமல் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள ரவுடிகளுக்கு மத்தியில் இந்த ஒயிட் காலர் ரவுடிகள் ஷேர் மார்க்கெட், டெக்னாலஜி, நாட்டு நடப்பு என்று அனைத்திலும் அப்டேட்டோக இருப்பது தான் இவர்களின் சக்சஸ் மந்திரம். தற்போது நாளுக்கு நாள் சென்னையில் இந்த மாதிரி பல ஒயிட் காலர்கள் பெருகி வருகின்றனர். ஜாதிக்கு ஒருவர், மொழிக்கு ஒருவர், கட்சிக்கு ஒருவர் என பலர் இருக்கிறார்கள். இவர்களில் பலரும் வெளிமாநிலக்காரர்கள் என்பது தான் மிக முக்கியமான விஷயம். பினுவும் அப்படிப்பட்ட ஒரு ஒயிட் காலர் ரவுடி தான்.