ஜெ.வால் தண்டிக்கப்பட்டவர்கள் அவரை எப்படி காப்பாற்ற முயன்றிருப்பார்கள்? மருது அழகுராஜ் பரபர
ஜெயலலிதாவால் தண்டிக்கப்பட்டவர்கள்தான் அவரை பார்த்துக்கொண்டதாக நமது எம்ஜிஆர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவால் தண்டிக்கப்பட்டவர்கள்தான் அவரை பார்த்துக்கொண்டதாக நமது எம்ஜிஆர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்துக்குப்பிறகு அதிமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேறின. அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றது முதல் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆதரவாய் இருந்தவர் நமது எம்ஜிஆர் நாளிதழின் அப்போதைய ஆசிரியர் மருது அழகுராஜ்.
பல தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் சசிகலா குடும்பத்திற்கு ஆதரவாக அவர் பேசி வந்ததை காணமுடிந்ததது. அதிமுக அரசு பாஜகவுடன் இணக்கமாய் இருந்தபோதும் கூட சசிகலா குடும்பத்திற்கு எதிராக சதி செய்வதாக பாஜகவை நமது எம்ஜிஆரில் சாடி எழுதினார்.
மருது அழகுராஜை நீக்கிய தினகரன்
இந்நிலையில் சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக கூட்டு ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் கூட்டு சேர்ந்தது. அப்போது அமைச்சர்களை சந்தித்தாக கூறி மருது அழகுராஜை நமது எம்ஜிஆர் நாளிதழில் இருந்து நீக்கினார் டிடிவி தினகரன்.
யாரையும் சந்திக்கவிடவில்லை
இதையடுத்து புதிய தலைமுறையின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மருது அழகுராஜ் சசிகலா குடும்பத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். ஜெயலலிதாவுடன் இருந்த 30 வருடங்களில் சசிகலா யாரையும் அவரை சந்திக்கவிடவில்லை என்றார்.
வசூல் செய்தது மிக அதிகம்
ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கக்கூட நல்ல மருத்துவர்களை சசிகலா அனுமதிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். 30 வருடங்கள் ஜெயலலிதாவை சசிகலா நன்றாக பார்த்துக்கொண்டதாக கூறிய மருது அழகு ராஜ் அதற்காக அவர் வசூல் செய்தது மிக அதிகம் என்றும் சாடினார்.
எப்படி காப்பாற்ற நினைப்பார்கள்?
ஜெயலலிதாவால் தண்டிக்கப்பட்டவர்கள், அவரால் வழக்கு தொடுக்கப்பட்டவர்கள், சிறை பிடிக்கப்பட்டவர்கள், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தான் அவரை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்றும் மருது அழகுராஜ் தெரிவித்தார். அவர்கள் எப்படி ஜெயலலிதாவை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்திருப்பார்கள் என தொண்டர்கள் கேள்வி எழுப்புவதாகவும் அவர் கூறினார்.
அவர்கள் தான் கவனித்துக்கொண்டனர்
சசிகலாவின் கணவர் நடராஜன், திவாகரன், பாஸ்கரன், ராவணன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதையும் மருது அழகுராஜ் நினைவு கூர்ந்தார். ஜெயலலிதால் கட்டம் கட்டி வெளியேற்றப்பட்டவர்கள் தான் அவரை உடனிருந்து கவனித்துக்கொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பாஜக தான் காரணம்
தன்னை நமது எம்ஜிஆரில் இருந்து தினகரன் நீக்கியதற்கு பாஜகவே காரணம் என்றும் அவர் தெரிவித்தார். பாஜக குறித்து விமர்சித்து கட்டுரை வெளியிட்டதாலேயே பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்து தன்னை நீக்குவதாக அறிவித்தார் என்றும் மருது அழகுராஜ் கூறினார்.