தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் சஸ்பென்ட் செய்யப்பட்டதன் பின்னணி என்ன?- exclusive
தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் திடீரென சஸ்பென்ட் செய்யப்பட்டதற்கான பின்னணி விவரங்கள் கிடைத்துள்ளன.
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் திடீரென சஸ்பென்ட் செய்யப்பட்டதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் சங்க பொதுச்செயலர் விஷால் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆனந்த விகடன் வார இதழுக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்த பேட்டிக்காக இத்தனை மாதங்களாக நடவடிக்கை எடுக்காத தயாரிப்பாளர் சங்கம் நேற்று திடீரென விஷால் சஸ்பென்ட் செய்யப்படுவதாக அறிவித்தது. இந்த திடீர் நடவடிக்கையின் பின்னணி குறித்து நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்துக்கு கிடைத்த தகவல்கள்:
விஷாலுக்கு நடிகர் சங்கத்தில் குடைச்சல் கொடுத்து வரும் வாராகி, தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருக்கிறார். விஷால் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் ஆகஸ்ட் மாதமே வாராகி வலியுறுத்தினாராம்.
ஆனாலும் அதைபற்றியெல்லாம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கண்டுகொள்ளாமலேயே இருந்துள்ளனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான ஆவணங்கள் வாராகி கைகளுக்கு கிடைத்தது.
விஷால் விமர்சித்து வரும் நிலையில் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை; இதோ உங்கள் ஊழல் ஆவணங்கள் இருக்கின்றன; நானும் பத்திரிகையாளர்களிடம் உங்கள் முறைகேடுகளை சொல்லுகிறேன் என வாராகி கூற அலறிப் போனதாம் தயாரிப்பாளர் சங்கத் தரப்பு. இதனால் வேறுவழியே இல்லாமல் அவசரமாக செயற்குழுவைக் கூட்டி விஷாலை சஸ்பென்ட் செய்வதாக அறிவித்திருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.
நடிகர் சங்கத்துடன் மல்லுக்கட்டி வரும் வாராகி விரைவில் தயாரிப்பாளர் சங்கத்துக்குள்ளும் குடைச்சல் குரலை எழுப்பக் கூடும் என்பதால் நிர்வாகிகள் கிலியில் உள்ளனராம்.