வைகை ஆற்றின் கரையோரம்.. நடுங்க வைக்கும் நாகராஜ்.. அதிர வைக்கும் "புல்லட்"டின் மறுபக்கம்!
தேனி: மதுரை, பெரியகுளத்தில் பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த புல்லட் நாகராஜனை பற்றி பேச்சுகள் எழுந்துள்ள நிலையில் அவரது மறுபக்கம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
"லாரி மேல ஏறும் பாத்துக்கோ" என மதுரை போலீஸ் எஸ்பி ஊர்மிளாவையே கதிகலங்க வைத்தவர் புல்லட் நாகராஜன். அதுமட்டுமல்லாமல் அவர் போலீஸ்காரர்களை செய்த கொலைகள் குறித்தும் வாக்குமூலம் போல் கொடுத்தார்.
அதுபோல் "வேட்டையாடும் மிருகமாகிவிடுவேன்" என பெரியகுளத்தில் உள்ள இன்னொரு காவல் துறை ஆய்வாளரையும் செல்போனில் மிரட்டியுள்ளார் புல்லட் நாகராஜன். இந்த மிரட்டல் செய்திகளுக்கு மத்தியில் புல்லட் நாகராஜன் குறித்த தகவல்கள் சிலவற்றை பார்ப்போம்.
புல்லட்
தேனி மாவட்டம் வடுகபட்டி அருகே உள்ளது மேல்மங்கலம். இந்த ஊர்தான் புல்லட் நாகராஜின் சொந்த ஊர். அழகான குக்கிராமம். வைகை அணை செல்லும் சாலையில் உள்ளது. எழில் கொஞ்சும் மேல்மங்கலத்தில் புல்லட் நாகராஜனைத் தெரியாதவர்களே கிடையாது. டபடபவென புல்லட்டில் கம்பீரமாக உலா வருவது இவரது ஸ்டைல். ஆனால் உள்ளுக்குள் ஏகப்பட்ட கிரிமினல்தனம்.
புல்லட்மீது வழக்குகள்
இவருக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி. மூன்று பேருமே சேட்டைக்காரர்கள்தான். அண்ணன் ரமேஷ் தனது மனைவியைக் கொன்று விட்டு ஆயுள் தண்டனைக் கைதியாகி சிறைக்குப் போனவர். புல்லட் நாகராஜ் மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. 50க்கும் மேல் உள்ளதாக சொல்கிறார்கள். கறிக்கடைக்காரரிடம் பித்தளை நகையைக் கொடுத்து ஏமாற்றியது. ஏகப்பட்ட பேரிடம் பண மோசடி, கட்டப் பஞ்சாயத்து என்று.
வட்டிக்கு பணம்
இவர் மீது உள்ள முக்கிய வழக்கு மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ. 10 லட்சம் பணத்தை கொள்ளையடித்தது என்று சொல்கிறார்கள். இதை மீட்க போலீஸ் தரப்பில் எந்த முயற்சியும் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தப் பணத்தை இவர் வட்டிக்கு விட்டு பிழைத்து வருவதாகவும் ஊர் மக்கள் சொல்கிறார்கள்.
ஏகப்பட்ட புகார்கள்
ஊரில் சாதாரணமான முறையில் நடமாடி வரக் கூடியவராகத்தான் இருந்திருக்கிறார் புல்லட். ஆனால் இத்தனை காலமாக இல்லாத இவர் மீதான புகார்கள் இப்போது திடீரென வெடித்துக் கிளம்பியுள்ளன.