புதிய ரூபாய் நோட்டு விவகாரம்: பெங்களூரு சிறையில் கம்பி எண்ணும் எடப்பாடி பழனிச்சாமி மகனின் சகலை!
புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கிய வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி மகனின் சகலை சந்திரகாந்த் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
சென்னை: அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் சசிகலா அணியினர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக முன்னிறுத்தியுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமியும் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிய விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் சந்திரகாந்த் பெங்களூரு சிறையில் 6 மாதங்களாக அடைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவி வந்தது. இது தொடர்பாக நாம் விசாரித்த போது கிடைத்த தகவல்கள்:
சகலை சந்திரகாந்த்
பெங்களூரு சிறையில் கம்பி எண்ணுவது எடப்பாடி பழனிச்சாமியின் மகன் அல்ல. எடப்பாடி பழனிச்சாமி மகனின் சகலை சந்திரகாந்த் ராமலிங்கம்.
ஈரோடு ராமலிங்கம்
அதாவது புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது நாடு முழுவதும் பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஈரோட்டிலும் ஒப்பந்ததாரர் ராமலிங்கம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
பெங்களூருவிலும் சோதனை
ராமலிங்கத்தின் மகன் சந்திகாந்துக்கு சொந்தமான பெங்களூரு நிறுவனங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் ரூ6 கோடி மதிப்பிலான புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் சிக்கின. இந்த ராமலிங்கத்தின் மகன் சந்திரகாந்தும் எடப்பாடி பழனிச்சாமியின் மகனும் ஒரே வீட்டில் திருமணம் செய்துள்ளனர்.
ஸ்டாலின் கேள்வி
எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவர் ஈரோடு ராமலிங்கம் என்பதால் இது தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கேள்விகளை எழுப்பியிருந்தார். இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.