இரு நீதிபதிகளில் ஒருவர் தவறு செய்தது உண்மை.. தப்பு செய்தது யார்?
சென்னை: நீதிபதி குமாரசாமி கணக்குதான் தவறு என்று பார்த்தால் நீதிபதி குன்ஹாவும் கூட தவறு செய்திருக்கிறார். இதனால் யார் சொல்வது உண்மை, தவறு செய்தது யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவுமே ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உற்றுப் பார்க்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இதற்குக் காரணங்கள் பல. ஆனால் ஒரு முக்கிய காரணம் நீதிபதிகள் குன்ஹா அளித்த முதல் தீர்ப்பும்.. நீதிபதி குமாரசாமி அளித்த 2வது தீர்ப்புமே.
காரணம் இரு தீர்ப்புகளுமே ஒன்றுக்கு ஒன்று அவ்வளவு முரண்பாடாக உள்ளது. ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருமே 100 சதவீதம் குற்றவாளிகள் என்று குன்ஹா தீர்ப்பளிக்க... இல்லை இல்லை. நான்கு பேருமே 100 சதவீதம் நிரபராதிகள் என்று நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்த அனைவரையும் அதிர வைத்து விட்டார்.
அது எப்படி சட்டத்தின் பார்வையில் இரு வேறு விதமான நோக்கு இருக்க முடியும் என்பது சாதாரண பாமரர்களுக்கு ஒரு போதும் புரியாது. காரணம், நமது சட்டம் கோர்ட்டுக்குக் கோர்ட் வேறுபடுவதாக இருக்கும் நிதர்சனமே. இந்த வித்தியாசமான பார்வையும், விசாரணையும் இருக்கும் வரை இப்படிப்பட்ட முரண்பாடான தீர்ப்புகள் தொடரத்தான் செய்யும்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். நீதிபதி குமாரசாமி போட்ட கணக்கு என்று அனைவரும் கூறி வருகின்றனர். அந்தக் கணக்கை சரி செய்யும் வேலையில் நீதிபதியும் கூட இறங்கியுள்ளார். ஆனால் நீதிபதி குன்ஹாவும் கூட தனது தீர்ப்பில் கணக்கில் ஒரு தவறு செய்துள்ளது இப்போது கண்ணுக்குத் தெரிய வந்துள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வாங்கிய வங்கி மற்றும் இதரக் கடன் தொகை ரூ. 24,17,31,274 என்பது குமாரசாமி தரும் கணக்கு. ஆனால் அவர் போட்டக் கணக்கைக் கூட்டிப் பார்த்தால், ரூ. 10 கோடியே சொச்சம்தான் வருகிறது என்பது திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா உள்ளிட்டோரும் சொல்லும் வாதமாகும். கூட்டிப் பார்த்தால் இவர்கள் சொல்லும் தொகைதான் வருகிறது.
அடடா குமாரசாமி தப்பு செய்து விட்டாரே என்று பார்த்தால் முன்பு சிறப்பு நீதிமன்றத்தில் குன்ஹா தீர்ப்பளித்தபோது அவரது கணக்கிலும் ஒரு தப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
குன்ஹாவின் தீர்ப்பில், 665வது பக்கத்தில் தங்கம் மற்றும் வைரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கைப்பற்றப்பட்ட 20, 548 கிராம் தங்கத்தின் மதிப்பு ஒரு கிராமுக்கு 433 ரூபாய் என கணக்கிடப்பட்டது. இதன் மொத்த தொகை ரூ.8,90,55,032 எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கணக்கைப் போட்டால் கூட்டுத் தொகை ரூ.88,97,284 என்றுதான் வருகிறது. எனவே இந்தக் கணக்கும் தப்புதான்.
இரண்டு நீதிபதிகளுமே 100 சதவீத மாறுபட்ட தீர்ப்பைக் கொடுத்துள்ளனர். இரண்டு பேருமே கணக்கில் தப்பு செய்துள்ளனர். இரண்டு பேருடைய தீர்ப்புமே தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.
சட்டம் ஒரு இருட்டறை.. அதில் வழக்கறிஞர்களின் வாதமே விளக்கொளி என்பார்கள்.. ஆனால் நீதிபதிகளின் தீர்ப்புகளில் இப்படி பளிச்சிடும் தவறுகள் இருப்பது....