குறை சொல்பவர்கள் கடைசியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக மாறிவிடுவார்கள்.. சொல்கிறார் ஓபிஎஸ்!
குறை சொல்பவர்கள் கடைசியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக மாறிவிடுவார்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: குறை சொல்பவர்கள் கடைசியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக மாறிவிடுவார்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல் மின் நிலையத் திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். 660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலைய அலகு ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி முறையில் அடிக்கல் நாட்டினார்.
சீர்திருத்தியவர் ஜெயலலிதா
இதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் மின் தேவை போக மீதம் உள்ள மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு அளிக்கும் வகையில் மின்வாரியத்தை சீர்திருத்தியவர் ஜெயலலிதா என்று கூறினார்.
இருளும் இன்னலும் சூழக்கூடாது
இருண்டு கிடந்த தமிழகம் மின் மிகை மாநிலமாக மாற ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களே காரணம் என்றும் அவர் கூறினார். எந்த காலத்திலும் தமிழகத்தில் இருளும் இன்னலும் சூழக்கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்தார் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக..
மேலும் அரசு மீது குறை சொல்லிக்கொண்டே இருப்பவர்கள் இறுதியில் மனநலம் பாதித்தவர்களாக மாறிவிடுவார்கள் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மின்மிகை மாநிலமாக..
தமிழகத்தின் தேவையான 15,000 மெகாவாட் உற்பத்தியை அடையும் வகையில் மின்துறை வளர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் 2011-ல் மின் பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகம், தற்போது மின்மிகை மாநிலமாக உருவெடுத்துள்ளது என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.