தி.மு.க. சென்னை தெற்கு மா.செ. பதவி? தனசேகரன்- மா.சு. இடையே கடும் போட்டி!!
சென்னை: திமுக 65 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில் சென்னை தெற்கு மாவட்ட செயலர் பதவிக்கு விருகம்பாக்கம் தனசேகரன் மற்றும் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் இடையே கடும் போட்டி உருவாகி உள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்த நிலையில் கட்சியை சீரமைக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகளின் படி திமுக மொத்தம் 65 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.
இந்த மாவட்ட பிரிப்பில் சில மாவட்ட செயலர்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் ஏற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர். இன்னும் சிலர் சட்டசபை தொகுதிகள் புவியியல் ரீதியாகவே மாற்றி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை தலைமை கழகத்தில் உரிமையோடு சுட்டிக்காட்டி பேசியும் மாறுதல்களைப் பெற்றும் வருகின்றனர்.
இந்நிலையில் 4 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள சென்னையின் தெற்கு மாவட்ட செயலாளர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தெற்கு மாவட்த்தில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை தொகுதிகள் வருகின்றன. திமுகவைப் பொறுத்தவரையில் சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியன் நல்ல ஆதரவைப் பெற்றவர். விருகம்பாக்கம் தொகுதியிலோ கே.கே.நகர் தனசேகரனுக்கு ஆதரவு அதிகம். அவர் விருகம்பாக்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டவர்.
ஏற்கெனவே தனசேகரனுக்கு சென்னை மேயர் பதவி கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தன. ஆனால் ஸ்டாலினின் ஆதரவுடன் மா.சுப்பிரமணியத்துக்கு மேயர் பதவி கிடைத்தது. இதனால் இம்முறை தனசேகரனுக்குத்தான் சென்னை தெற்கு மாவட்ட செயலர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்பது அவரது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு.
இருப்பினும் மா.சுப்பிரமணியத்துக்கு ஸ்டாலினின் முழுமையான ஆதரவு இருப்பதால் அவருக்கே மாவட்ட செயலர் பதவி கிடைக்கலாம் என்றும் கூறப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதியின் ஆதரவு தனசேகரனுக்கும் ஸ்டாலினின் ஆதரவு மா.சுப்பிரமணியத்துக்கும் இருப்பதால் இருதரப்பும் சமாதானமாகக் கூடிய வகையில் திமுக மேலிடம் முடிவெடுக்கலாம் என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது தனசேகரனை சென்னை தெற்கு மாவட்ட செயலளராக்கிவிட்டு, மா.சுப்பிரமணியத்தை மாநில நிர்வாகப் பதவி ஒன்றில் அமர்த்திவிடுவது என்ற சுமூகமான அஜெண்டா ஒன்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தனசேகரன் ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.