சுனந்தா, இளவரசன், சரவணனைத் தொடர்ந்து ராம்குமார் வழக்கிலும் மர்மங்களை உடைப்பாரா சுதிர் குப்தா?
சென்னை: இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மரணங்களில் மர்ம முடிச்சுகளை அவிழ்த்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் டாக்டர் சுதிர் குப்தா ராம்குமார் கொலை வழக்கிலும் என்ன பரபரப்பை ஏற்படுத்தப் போகிறார் என்ற எதிர்பார்பு ஏற்பட்டுள்ளது.
சுவாதி கொலை வழக்கின் விசாரணைக் கைதி ராம்குமார் சிறையில் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்கிறது சிறைநிர்வாகம். ஆனால் இது நம்பும்படியாக இல்லை; கொலை செய்யப்பட்டிருக்கிறார் ராம்குமார் எனவும் கூறப்படுகிறது.
இதனால் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையின் போது தாங்கள் கூறும் தனியார் மருத்துவரை அனுமதிக்க கோரியது ராம்குமார் பெற்றோர் தரப்பு. ஆனால் இதை நிராகரித்த நீதிமன்றங்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் சுகிர் குப்தாவை பிரேத பரிசோதனைக் குழுவில் இடம்பெற வைத்தது.
பிரேத பரிசோதனை
ராம்குமார் மரணமடைந்த 13 நாட்களுக்குப் பின்னர் இன்று பிரேத பரிசோதனை நடைபெற்றது. காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 வரை பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
சுனந்தா புஷ்கர்
நீதிமன்றம் நியமித்திருக்கும் மருத்துவர் சுதிர் குப்தாதான், டெல்லியில் முன்னாள் அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்பாவின் மர்ம மரணத்தில் உண்மைகளைப் போட்டு அது கொலை என்பதை அம்பலப்படுத்தியவர். இதனாலே எய்ம்ஸ் மருத்துவமனை தடவியல் துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இளவரசன்
இதேபோல் தருமபுரியில் மர்மமாக உயிரிழந்தார் இளவரசன். அப்போது இளவரசன் பிரேத பரிசோதனைப் சர்ச்சை எழுந்தபோது உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர் சுதிர் குப்தா.
சரவணன்
டெல்லி எய்ம்ஸில் படித்த தமிழக மாணவர் சரவணன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் சரவணன் உடலை பிரேத பரிசோதனை செய்த சுதிர் குப்தா குழுதான், சரவணன் உடலில் யாரோ விஷ ஊசி போட்டு கொலை செய்திருக்கிறார்கள் என்ற உண்மையை உலகத்துக்கு எடுத்து சொன்னது.
ராம்குமார்
தற்போது சிறையில் மின்சார ஒயரை கடித்து இறந்ததாக சொல்லப்படும் ராம்குமார் பிரேத பரிசோதனையிலும் உயர்நீதிமன்றத்தால் சுதிர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். ராம்குமார் உடலில் காயங்கள் இருப்பதாக பெற்றோர் கூறும் நிலையில் சுதிர்குப்தாவின் அறிக்கை எப்படி வருமோ? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.