குட்கா ஊழலில் ஜார்ஜ் வீட்டில் சிபிஐ ரெய்டு ஏன்? பரபர பின்னணி தகவல்கள்
சென்னை: குட்கா ஊழலில் முன்னாள் சென்னை கமிஷனர் ஜார்ஜ் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குட்கா விவகாரத்தில் காவல்துறையினர் லஞ்சம் பெறுவதாக 2016ம் ஆண்டு இறுதியில் அப்போது சென்னை கமிஷனராக இருந்த ஜார்ஜ் (கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்), தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தார். அப்படிப்பட்டவர்தான், இப்போது சிபிஐ விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார் என்பதை கேட்க ஆச்சரியமாக இருக்கும்.
ஆனால், இதில் ஆச்சரியப்பட எதுவும், இல்லை. அந்த கடிதம் என்பதே, தலைக்கு மேல் வெள்ளம்போன பிறகு, கீழேயுள்ள அதிகாரிகள் மீது பழிபோடப்பட எழுதப்பட்ட கண்துடைப்பு கடிதம் என்கிறது சிபிஐ வட்டாரம்.
பின்னணி இதுதான்
ஜார்ஜ் மற்றும் குட்கா ஊழல் தொடர்பான விவரங்களை அறிய ஒரு குட்டி பிளாஷ் பேக். 2014ம் ஆண்டில் சென்னை சிபிஐக்கு வந்த புகார் கடிதத்தில், ஒரு புகார் சென்னை, மாதவரத்தில் இயங்கி வரும் ஒரு சட்டவிரோத குட்கா தயாரிக்கும் நிறுவனம் கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்து வருவதாகவும், அந்த வரி ஏய்ப்பை மத்திய அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிபிஐ விசாரணை
இந்த கடிதத்தின் மீதான விசாரணை, 2015 மார்ச் மாதத்தில்தான் முடிக்கப்பட்டுள்ளது. மாதவரத்தில் சட்டவிரோத குட்கா தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது என்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இந்த புகார் மனு மற்றும் விசாரணை அறிக்கையை சென்னை மாநகர கமிஷனராக இருந்த ஜார்ஜுக்கு அனுப்பியது சிபிஐ.
வழக்கு க்ளோஸ்
ஜார்ஜ் அப்போதைய சென்னை மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமாரிடம் விசாரிக்க உத்தரவிட, ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் 2014 ஜூன் மாதம் குட்கா கிடங்கில் ரெய்டு நடத்தி குட்காக்களை பறிமுதல் செய்தனர். குட்கா பொருட்கள் சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், குட்கா தயாரிப்பாளர்கள், அமைச்சரான விஜயபாஸ்கரையும், ஜார்ஜையும் அணுகியதாக கூறப்படுகிறது. இதன்பிறகு அது குட்கா போதைப்பொருளே இல்லை என வழக்கு ஊத்தி மூடப்பட்டது.
டைரியில் ஜார்ஜ் பெயர்
ஜார்ஜுடனான குட்கா உரிமையாளர்களுடனான சந்திப்பிற்கு பிறகு எந்தவித தடையுமின்றி குட்கா உற்பத்தியும், விற்பனையும் கன ஜோராக நடக்க ஆரம்பித்தாக கூறுகிறது சிபிஐ வட்டாரம். இந்த நிலையில்தான், 2016ம் ஆண்டு ஜூலையில் வருமானவரித் துறை மாதவரம் குட்கா கிடங்கு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியபோது, உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட மாமூல் குறித்து ஒரு டைரி சிக்கியது. அந்த டைரியில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 8 கோடியும், சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜுக்கு ரூ. 2.5 கோடியும் கொடுக்கப்பட்டதாக பதிவுகள் காணப்படுவதாக கூறியது வருமான வரித்துறை வட்டாரம். வருமான வரித்துறை நிறைய ஆதாரங்களை கொடுத்த பிறகும்கூட, முதல்வராக இருந்த ஜெயலலிதா ஜார்ஜ் மீதோ அமைச்சர் மீதோ நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஜார்ஜுக்கு பிரமோஷன் கொடுத்தார்.
ஜார்ஜ்ஜை எதிர்க்க முடியாது
இதைவிட பெரிய ஷாக் என்னவென்றால், வருமான வரித்துறையின் சோதனை குறித்த தகவலையறிந்து , அப்போது டிஜிபியாக இருந்த அஷோக் குமார், விசாரிக்க உத்தரவிட்டார். சென்னை மாநகர குற்றப் பிரிவின் கூடுதல் ஆணையராக இருந்த அருணாச்சலம் விசாரித்தார். இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு இவை கொண்டு செல்லப்பட்டன. இரவோடு இரவாக அசோக்குமார் திடீரென விருப்ப ஓய்வு கடிதம் அளித்தார்.
அதிகாரி அருணாச்சலம், திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்திற்கு மாற்றப்பட்டார். ஆனால், மறுபக்கமோ ஜார்ஜ் பதவி உயர்வை பெற்றார். இப்போதைய டிஜிபியாக உள்ள ராஜேந்திரனும் இதில் உடந்தை என்ற குற்றச்சாட்டின்பேரில்தான் சிபிஐ அவர் வீட்டிலும், அலுவலகத்திலும் இன்று ரெய்டு நடத்தியது. அப்படியானால், குட்கா விவகாரத்தை விசாரித்தவர்கள் பதவியில் இருந்து விரட்டப்பட்டனர். சம்மந்தப்பட்டவர்கள் கொண்டாடப்பட்டனர் என்பது உறுதியாகியுள்ளது. ஜார்ஜை எதிர்த்து அப்போதைய டிஜிபியால் கூட நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதைத்தான் அசோக்குமாரின் விருப்ப ஓய்வு உலகிற்கு பறைசாற்றுகிறது.