TNPSC scam: மோசடிக்கு மூளையாக.. ஜெயக்குமார்.. அடுத்தடுத்து அவிழும் முடிச்சுகள்.. அதிர்ச்சி தகவல்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் மோசடி நடந்த விவகாரத்தில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த ஜெயகுமார் இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
இந்த ஜெயக்குமார் தான் தன்னை நம்பி அரசு வேலை வாங்கி தருமாறு நாடுபவர்களுக்கு சரியாக வேலை வாங்கி கொடுத்திருக்கிறார் என கைது செய்யப்பட்ட காவலர் சித்தாண்டி கூறியிருக்கிறார். சித்தாண்டியின் குடும்பமே தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர உதவியதும் ஜெயக்குமார் தான் என்கிறார்கள்.
சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தான் டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படுகிறார். அண்மையில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ் குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தை தேர்வு செய்த பலரும் வெற்றி பெற்று இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இங்கு குருப் 4 தேர்வு எழுதிய 19 பேர் முதல் 19 இடங்களை பிடித்திருந்தனர். முதல் 100 இடங்களில் 39 ரேங்குகளை, குறிப்பிட்ட அந்த இரு தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதியவர்கள் பெற்றனர். இதனால் பெரும் சந்தேகம் ஏற்பட்டது
டிஎன்பிஎஸ்சி மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்.. இடைத்தரகர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண்
பலரும் சிக்கினர்
இது தொடர்பாக விரிவான விசாரணையில் இறங்கிய டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் எழுதி வெற்றி பெற்ற அனைவரையும் மேற்பட்டோரை நேரில் அழைத்து தனியாக தேர்வு எழுத வைத்தனர். அதன்பிறகுதான் முறைகேடு நடந்தது உண்மைதான் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது பலரும் வரிசையாக சிக்கினர். இதையடுத்து 99 பேருக்கு தேர்வு எழுத டிஎன்பிஎஸ்சி நிரந்தர தடை விதித்தது.
பலரும் கைது
தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளிக்கல்வித் துறை அலுவலக உதவியாளர் ரமேஷ்(39), எரிசக்தித் துறை அலுவலக உதவியாளர் திருக்குமரன்(35), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) ரெக்கார்டு கிளார்க் ஓம்காந்தன் ஆகியோர் கைதாகினார். இடைத்தரகர்களாக செயல்பட்ட சென்னை ஆவடியை சேர்ந்த வெங்கட்ரமணன், தேனிமாவட்டம் சீலையம்பட்டியைச் சேர்ந்த பாலசுந்தர்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். இதேபோல் இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்து முதல் நூறுஇடங்களுக்குள் வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன், கடலூரை சேர்ந்த ராஜசேகர், சென்னை ஆவடியை சேர்ந்த காலேஷா, திருவல்லிகேணியை சேர்ந்த நிதீஷ்குமார், ராணிப்பேட்டையை சேர்ந்த கார்த்தி, திருவள்ளூரை சேர்ந்த வினோத்குமார், கடலூரை சேர்ந்த சீனிவாசன், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சிவராஜ், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர்.
சித்தாண்டி குடும்பம்
இதனிடயே குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதை டிஎன்பிஎஸ்சி கண்டுபிடித்தது. குரூப் 2 ஏ தேர்வில் சென்னையைச் சேர்ந்த காவலர் சித்தாண்டியின் மனைவி , இரண்டு தம்பிகள், உள்பட குடும்பமே வெற்றி பெற்றதும் அவர்களும் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையத்தை தேர்வு செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து
காவலர் சித்தாண்டி நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்டார்.
கமிஷன் கொடுப்பார்
சித்தாண்டியை விசாரித்த போது தனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது என்றும், ஜெயக்குமாரை நம்பினால் அரசு வேலை வாங்கி கொடுப்பார் என்பதால் அவருக்கு இடைத்தரகாக வேலை பார்த்தேன். என்னை அணுகுவர்களை அவரிடம் அறிமுகம் செய்து வைப்பேன். அவர் அண்ணா நகரில் குறிப்பிட்ட இடத்திற்கு அவர்களை அழைத்து சென்று பணம் பெறுவார். ஆனால் எவ்வளவு என தெரியாது எனக்கு கமிஷன் கொடுப்பார் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
13லட்சம் ரூபாய் வசூல்
இடைத்தரகர் ஜெயக்குமார் தான் 200க்கும் மேற்பட்டோருக்கு அரசு வேலை பெற்றுத்தர உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விலும், 2018ல் நடந்த ,குரூப் 2ஏ தேர்வுகளிலும் மோசடி செய்து பலரை வேலையில் சேர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. குரூப்2 என்றால் 13 லட்சமும், குரூப் 4 என்றால் 9 லட்சம் ரூபாயும் ஜெயக்குமார் வசூலித்தாக சொல்லப்படுகிறது.
பலரும் பீதியில்
ஜெயக்குமாரால் டிஎன்பிஎஸ்சி துறையில் பெரிய ஆதரவு இல்லாமல் இத்தனை பேரை வேலைக்கு சேர்ந்திருக்க முடியாது என்று சொல்கிறார்கள். இதற்கிடையே டிஆர்பி தேர்விலும் ஜெயக்குமார் கைவரிசையை காட்டியிருப்பதாக புகார் எழுந்ததுள்ளது. ஜெயக்குமார் மூலம் அரசு பணியில் சேர்ந்த பலரும் இப்போது பீதியில் உள்ளார்கள். இந்த மோடிசயில் ஜெயக்குமார் கைதுடன் முடியுமா அல்லது இன்னும் பலர் கைதாவார்களா என்பது சிபிசிஐடியின் அடுத்தடுத்த விசாரணையில் தெரியவரும்.