விஜயபாஸ்கர் 'ஆசி'யுடன் சுகாதாரத்துறை கட்டுமான ஒப்பந்தங்களை பெற்ற சுப்பிரமணியம்!
சென்னை: தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் சுகாதாரத்துறை ஒப்பந்தங்களை ஏராளமாகப் பெற்றவர்தான் தற்கொலை செய்து கொண்ட நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம்.
வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரும் வருமான வரிச் சோதனையில் சிக்கியவருமான நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த மாதம் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அப்போது நாமக்கல் அருகே மோகனூரில் உள்ள சுப்பிரமணியம் வீட்டிலும் பலமணிநேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றினர்.
திருச்சி, சேலத்தைச் சேர்ந்த 8 அதிகாரிகளைக் கொண்ட குழுதான் இந்த சோதனையை நடத்தியது. இந்த நிலையில் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
தற்கொலை செய்த சுப்பிரமணியம், விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் அரசு கட்டிடங்களை கட்டும் ஒப்பந்தங்களைப் பெற்றிருந்தார். அத்துடன் தனிப்பட்ட முறையில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்வி நிறுவன கட்டிடங்களையும் கட்டியவர் இந்த சுப்பிரமணியம்.
விஜயபாஸ்கரின் மனைவி பெயரிலான நிறுவனங்களுக்கும் பின்புலமாக இருந்தவர் சுப்பிரமணியம். இவரது தற்கொலை தமிழக அரசியலில் பெரும் பிரளயத்தை கிளப்ப போகிறது.