தமிழக பாஜக புதிய தலைவர் யார்? கல்யாணராமனா, ராகவனா, கருப்பு முருகானந்தமா??
தமிழக பாஜகவின் புதிய தலைவர் பட்டியலில் கல்யாணராமன், ராகவன் மற்றும் கருப்பு முருகானந்தம் பெயர்கள் அடிபடுகின்றன.
சென்னை: தமிழக பாஜகவின் புதிய தலைவராக கல்யாணராமன், கே.டி. ராகவன் மற்றும் கருப்பு முருகானந்தம் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவராக உள்ள தமிழிசையை மாற்றுவது என்பதில் டெல்லி மேலிடம் உறுதியாக உள்ளது. இதனால் தமிழிசை சவுந்தரராஜன் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்கிற நிலை உள்ளது.
தமிழிசைக்கு பதிலாக வானதி சீனிவாசனை டெல்லி மேலிடம் பரிசீலிப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் தொடர்ந்து பெண்களுக்கே வாய்ப்பு தருவதா? என்கிற யோசனையில் இருக்கிறதாம் டெல்லி.
வானதி சீனிவாசன்
அத்துடன் வானதி சீனிவாசன் நல்ல பேச்சாளராக இருந்தபோதும் அரசியலில் தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறவர். அதனால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்கலாம் என கருதுகிறதாம் பாஜக மேலிடம்.
தீவிர ஆர்.எஸ்.எஸ்.
தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பு கிடைத்துவிடும் என பாஜக நினைக்கும் நிலையில் தீவிர ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களை தலைவராக்கலாம் என்கிற பரிசீலனையும் இருக்கிறதாம். இந்த அடிப்படையில் கல்யாணராமன், ராகவன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.
கல்யாணராமன்
கல்யாணராமனைப் பொறுத்தவரையில் எதிர்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பகிரங்கமாக பேசக் கூடியவர். வடதமிழகத்தில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். தமிழிசையைப் போல இல்லாமல் பகிரங்கமாக திராவிட இயக்க சித்தாந்தத்தை விமர்சிக்கக் கூடியவர்.
ராகவன்
அதேபோல் கே.டி. ராகவனும் ஊடக விவாதங்களில் அதிகம் பங்கேற்கக் கூடியவர். திராவிட இயக்க சித்தாந்தத்தை மிக கடுமையாக விமர்சித்து பதில்தரக் கூடியவர். இதனால் கல்யாணராமன் மற்றும் கேடி ராகவன் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.
கருப்பு முருகானந்தம்
இவர்கள் அல்லாமல் கருப்பு முருகானந்தத்தின் பெயரும் அடிபடுகிறது. கருப்பு முருகானந்தம் ஏற்கனவே சுவாதி- ராம்குமார் கொலை விவகாரங்களில் அடிபட்டவர். ஆட்பலத்தை திரட்டக் கூடிய வலிமை கருப்பு முருகானந்துக்கு இருப்பதாக பாஜக நம்புகிறது. இந்த மூவரில் ஒருவரை தமிழக பாஜக தலைவராக விரைவில் அறிவிக்கலாம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.