ராகவா லாரன்ஸ் யாரு.. அவருக்கும் போராட்டத்திற்கு என்ன சம்பந்தம்…. கொதிக்கும் சீமான்
நடிகர் ராகவா லாரன்ஸுக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர்கள் யாரையும் போராட்டத்தில் அனுமதிக்காத போது இவர் யார் போராட்டத்தை முடித்து வைக்க என
நெல்லை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு ராகவா லாரன்ஸ் மாணவர்களிடம் கடந்த திங்கள் கிழமை பேசினார். அப்படி பேச இவர் யார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நிரந்தர தீர்வு வேண்டும் என்று கோரி மாணவர்கள், இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் தீவிரம் காரணமாக அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது. அவசரச் சட்டம் வேண்டாம் நிரந்தரச் சட்டம் வேண்டும் என்று கோரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போலீசார் மாணவர்களை கொடூரமாக தாக்கி போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர முயன்றனர். அப்போது, சென்னையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த ஒரு பிரிவு மாணவர்கள் கடலில் நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் நடிகர் ராகவா லாரன்ஸ் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
இதனை சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று அவர் நெல்லையில் செய்தியாளர் சந்திப்பின் போது லாரன்ஸை கடுமையாக தாக்கிப் பேசினார். ஜல்லிக்கட்டுக்காக அறவழியில் போராடிய மாணவர்கள், இளைஞர்களை காவல்துறை கடுமையாக தாக்கியதை வன்மையாக கண்டித்த அவர், நாளை போலீசாரின் வன்முறையைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மாணவர்கள் போராட்டத்தை முடித்து வைக்க ராகவா லாரன்ஸ் யார் என்று கேள்வி எழுப்பிய சீமான், அவருக்கும் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றும், மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அவர்களே முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். ராகவா லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததால் போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என்று சொல்கிறாரா என்றும் சீமான் காட்டமாக கேள்வி எழுப்பினார்.