அடேங்கப்பா.. எத்தனை கட்சி, எத்தனை பல்டி.. ராஜகண்ணப்பனின் பின்னணி
ஓ.பன்னீர்செல்வம் அணியில் இன்று ராஜகண்ணப்பன் சேர்ந்துவிட்டார். ஓ.பி.எஸ் பலம் பெரும்போது தனக்கும் ஏதாவது நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: கட்சிமாறுவதில் ராஜகண்ணப்பன் கில்லாடி என்பது அவரது கடந்த கால அனுபவங்களின் மூலம் நன்கு தெரியவரும் விஷயம்.
1991 - 96 வரை, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி யில், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் கண்ணப்பன். பின், அதிமுகவிலிருந்து விலகி, யாதவர் சமுதாயத்தினர் ஆதரவுடன், 'மக்கள் தமிழ் தேசம்' என்ற கட்சியை துவங்கினார்.
ஆனால் அந்த கட்சிக்கு செல்வாக்கு கிடைக்கவில்லை என்பதை உணர்ந்ததும், திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பிறகு திமுகவிலிருந்து விலகி, தாய் கழகம் செல்வதாக கூறி அதிமுகவில் சேர்ந்தார்.
சீட் கிடைக்கவில்லை
இந்த நிலையில், அதிமுகவில் முக்கியத்துவம் இல்லை என்ற வருத்தம், ராஜ கண்ணப்பனுக்கு அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுவந்தது. ஜெயலலிதா ஆட்சி காலத்தின்போது, ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பொறுப்பு கிடைக்கும் என அவர் காத்திருந்தார். ஆனால் அவருக்கு எந்த பொறுப்பும் கிடைக்கவில்லை. குறைந்தபட்சம், 2016 சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார், ஆனால் அதுவும் கிடைக்கவில்லை.
எல்லோருமே தோல்வி
அதேநேரம், யாதவ சமூகம் சார்பில் போட்டியிட்ட, வாலாஜா கணேசன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், கோகுல இந்திரா ஆகியோர் தோல்வியடைந்தனர். இதனால் சட்டசபையில் அதிமுக சார்பில் யாதவ இனத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல்போய்விட்டது.
திமுகவுக்கு தூது
இதனால், கட்சித் தலைமை மீது கோபத்தில் இருந்தார் ராஜ கண்ணப்பன். இதையடுத்து, தன் ஆதரவாளர்கள் மற்றும் யாதவ சமுதாய பிரதிநிதிகளுடன், திமுகவில் இணைய அவர் முயற்சி மேற்கொண்டார். கனிமொழி மூலம் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தினார் என்று கூறப்பட்டது. ஆனால் இதற்கு ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
பன்னீர் அணி
இந்த நிலையில்தான், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இன்று அவர் சேர்ந்துவிட்டார். ஓ.பி.எஸ் பலம் பெரும்போது தனக்கும் ஏதாவது நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.