கொடநாடு படுகொலை..உண்மையை மறைக்க அப்பாவியை பலிகடாவாக்குகிறதா போலீஸ்?
கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலையில் சக காவலாளியான கிஷன்பகதூரை சிக்க போலீசார் முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோத்தகிரி: ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவின் காவலாளியை கொலை செய்தது சக காவலாளியான கிஷன்பகதூர் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பல உண்மைகளை மறைக்க போலீசாரே இதனை திட்டமிட்டு செய்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது மற்றொரு காவலாளியான கிஷன்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தக் கொலை குறித்து விசாரிக்க டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலையாளிகளை தேடி தனிப்படைகள் தீவிர வேட்டையில் ஈடுபட்டன.
சக காவலாளி
இந்த தேடுதேல் வேட்டையின் திடீர் திருப்பமாக, படுகாயம் அடைந்த கிஷன்பகதூர்தான், ஓம்பகதூரைக் கொலை செய்தவர் என்று போலீசார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். இது கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தை திசை திருப்புவதாக உள்ளது.
முக்கிய ஆவணங்கள்
சம்பவதன்று கொடநாட்டில் ஜெயலலிதா, சசிகலா அறைகள் உடைக்கப்பட்டிருந்தாகவும், அங்கிருந்த 3 சூட்கேஸ்களும் உடைக்கப்பட்டு அதிலிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாகி இருக்கலாம் என்றும் காவலாளிகளை தாக்கியவர்கள் அதை திருடிச் சென்றிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், காவலாளியே குற்றவாளியாக மாற்றும் முயற்சி பொதுமக்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மர்ம கும்பல்
படுகாயம் அடைந்துள்ள கிஷன்பகதூர்தான் குற்றவாளி என்றால் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் 23ம் தேதி இரவு இரண்டு மணிக்கு 2 பொலிரோ ஜீப்பில் உள்ளே நுழைந்து என்று கூறப்பட்டுள்ளதே அவர்கள் யார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. பொலிரோ ஜீப்பில் வந்தவர்கள் யார் என்றும் அந்த ஜீப்புகள் யாருக்கு சொந்தமானவை என்றும் போலீசார் தேடி வருவதாக அறிவிக்கப்பட்டது எதற்காக என்றும் கேள்வி எழுந்துள்ளது.
உண்மையை மறைக்க
கொடநாடு என்பது ஜெயலலிதா எப்போதாவது வந்து தங்கும் பங்களா என்றாலும், அங்கு பல்வேறு அரசு சார்ந்த மற்றும் அவருக்கு சொந்தமான தனிப்பட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆவணங்களை திருடுவதற்காக ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் போலீசார் கிஷன்பகதூரை குற்றவாளி என்று சொல்வதன் மூலம் உண்மையான கொலை மற்றும் கொள்ளை கும்பலை தப்ப வைக்கும் முயற்சி என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.