இத்தனை வருடங்களாக போலீசில் சிக்காத ராக்கெட் ராஜா கைதானது எப்படி? பரபர பின்னணி தகவல்
Recommended Video
சென்னை: வெங்கடேஷ் பண்ணையாரின் நெருங்கிய கூட்டாளியான ராக்கெட் ராஜாவை வளைத்துள்ளது சென்னை மாநகர போலீஸ். ' தென்மாவட்ட பஞ்சாயத்துகளோடு நிறுத்திக் கொள்ளாமல், சென்னையின் முக்கிய புள்ளி ஒருவரிடம் நடத்திய கொடூர பஞ்சாயத்துகள்தான் கைதுக்குக் காரணம்' என்கின்றனர் போலீஸ் வட்டாரத்தில்.
சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் நண்பர்களுடன் தங்கியிருந்த ராக்கெட் ராஜாவை நேற்று இரவு போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்த தகவலை வெளியில் சொல்லாமல் ரகசியமாக அவரை விசாரித்து வந்தனர்.
அதற்குள் காலையில் இருந்தே வாட்ஸ்அப் குரூப்புகளில் சில தகவல்கள் பரவின. ' நமது சமூகத்தைச் சேர்ந்த ராக்கெட் ராஜாவைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அனைவரும் விருகம்பாக்கம் காவல்நிலையத்துக்கு வரவும். சமுதாயத் தலைவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்' எனத் தகவலைப் பரவவிட்டனர்.
என்கவுண்டர் பீீதி
இத்தனைக்கும், 'அவர் எங்கே வைக்கப்பட்டிருக்கிறார்?' என்ற தகவலே வெளிவரவில்லை. 'விருகம்பாக்கம், தி.நகர் என ஒவ்வொரு காவல்நிலையங்களாக அவருடைய வழக்கறிஞர்கள் அலைந்து கொண்டிருந்தனர். ' அதே ஓட்டலின் ஒன்பதாவது மாடியில்தான் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவல் வெளியானது. இதனால், அவரது தரப்பு வழக்கறிஞர்கள் அதிர்ச்சியடைந்தனர். ' பண்ணையாரை என்கவுண்டரில் கொன்றதுபோல, ராஜாவையும் கொல்லத் திட்டமிட்டுள்ளனர்' எனக் கொதித்தனர்.
கட்ட பஞ்சாயத்து நிற்கவில்லை
ராக்கெட் ராஜா குறித்து நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், " பண்ணையார் என்கவுண்டருக்குப் பிறகு, தென்மாவட்டத்தில் நடக்கும் பஞ்சாயத்துகளுக்கு முடிவு வரும் என நினைத்தோம். கடந்த சில மாதங்களாக ராஜாவைக் குறிவைத்து ஏகப்பட்ட புகார்கள் வந்து கொண்டிருந்தன. கொடியங்குளம் பேராசிரியர் கொலை வழக்கில் ராஜாவின் பங்கு அனைவருக்கும் தெரியும்.
ஜெயலலிதா தரப்பை எதிர்த்தனர்
ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா புஷ்பா கிளம்பியபோது, அவருக்கு ஆதரவாக ஆள் பலத்தைக் குவித்தவர். புஷ்பாவுக்கு எதிராகப் பணிப்பெண் ஜான்சி புகார் கொடுத்தார். இந்த வழக்கில் ஜான்சிக்கு ஆதரவாக இருந்த வழக்கறிஞரின் வீடு தாக்கப்பட்டது. இதிலும் ராஜா பிரதான குற்றவாளி. அப்போதே அவரைக் குறிவைத்தோம். இப்போது சசிகலா புஷ்பா, தினகரன் அணியில் இருக்கிறார். அ.தி.மு.கவுக்கு எதிரான விஷயங்களையும் ராஜாவின் துணையோடுதான் புஷ்பா நடத்தி வந்தார். ஒருகட்டத்தில், போலீஸாரின் நெருக்குதல்கள் அதிகமாகவே, ' என்னைக் கொல்வதற்கு போலீஸார் திட்டமிட்டுள்ளனர். எனக்கு என்ன நடந்தாலும் நெல்லை போலீஸார்தான் பொறுப்பு' என வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டார் ராஜா.
ராக்கெட் ராஜாவான கதை
இதையடுத்து, ராஜாவின் தொடர்புகளை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர் சென்னை போலீஸார். இந்த விவகாரத்தில் நேரடியாகவே களமிறங்கினார் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத். இதற்கென ஸ்பெஷல் டீம் ஒன்றைப் போட்டு ராஜாவைத் தேடி வந்தனர். கடத்தல், கொலை என கர்நாடக போலீஸாரும் ராஜாவைத் தேடி வந்தனர். தென்மண்டல ஐ.ஜி.யாக கண்ணப்பன் பணியாற்றிய காலத்தில்(2009) ராஜாவின் வீட்டில் அதிரடி சோதனை நடந்தது. இதில் ராக்கெட் லாஞ்சர் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால்தான் ராஜா என்ற பெயர் ராக்கெட் ராஜா என பிரபலமடைந்தது.
ஜாதி தலைவர்கள் ஆதரவு கிடைக்குமா
சென்னையில் பிரபல புள்ளி ஒருவரை மிரட்டுவதற்காக, பஞ்சாயத்து பேசுவதற்காக நேரடியாக வந்து மாட்டிக் கொண்டார் ராஜா. 'அவரது கைதால் ஏதாவது விளைவுகள் ஏற்படுமா?' என உளவுத்துறை தரப்பில் விசாரணை நடந்தது.இதற்குப் பதில் கொடுத்த சமுதாயத் தலைவர் ஒருவர், ' பண்ணையார் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரிக்கையை முன்வைத்து நாங்கள் போராடினோம். அதில் ஒரு நியாயம் இருந்தது. இந்த விவகாரத்துக்குப் பிறகு, தி.மு.கவில் சேர்ந்து உள்துறை இணை அமைச்சரானார் ராதிகா செல்வி. இப்போது இவர்கள் நடத்தும் பஞ்சாயத்துக்களால் சமுதாயத்துக்குக் கெட்ட பெயர் வருவதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். இதை சட்டம் ஒழுங்கு பிரச்னையாகத்தான் பார்க்கிறோம். நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும், சமுதாயம் அவர் பின்னால் வரப்போவதில்லை' என விவரித்துள்ளனர்.
எதிர்பாராத திருப்பம்
இந்நிலையில், என்கவுண்டர் குறித்து சிலர் போலீஸாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ' என்கவுண்டர் செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை. அவரை நெல்லை போலீஸிடம் ஒப்படைத்துவிடுவோம்' எனப் பதில் அளித்துள்ளனர். இதையடுத்தே, நிம்மதிப் பெருமூச்சுவிட்டுள்ளனர் ராக்கெட் ராஜா கூட்டாளிகள். அதேநேரம், ' நட்சத்திர ஓட்டலில் பஞ்சாயத்துப் பேசக் காத்திருந்த ராக்கெட் ராஜாவின் கூட்டாளி, ராஜ் சுந்தரைத்தான் போலீஸார் வளைத்தனர். அந்தக் கூட்டத்தில் ராக்கெட் ராஜா இருந்தது எதிர்பாராத விஷயம்' என்கின்றனர் ஆச்சரியத்துடன்.